சனி, 27 ஆகஸ்ட், 2011

மூளையின் உணவு


உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் உணவு தேவைப்படுகிறது. அதேபோல்தான் மூளைக்கும் உணவு தேவை.


மூளை எப்போதும் ஏகப்பட்ட பசியோடு இருக்கும். பசி என்றால் ஏதோ சாம்பார் சாதம், பிரியாணி கேட்டு பசிப்பதல்ல. அது ஆக்சிஜன் பசி.
மூளையை பாதுகாக்க ஐந்து போர்வைகள், இரண்டு திரவங்கள் உண்டு. மண்டை தோலில் இருந்து தொடங்கி, பின் மண்டை ஓடு, கபால எலும்பு, அதன்கீழ் மெயின்ஜிஸ் என்ற பகுதி வரை இது செல்கிறது.
உடலிலே கெட்டியான சருமம் தலையில்தான் இருக்கிறது. அதற்கு மேல் தலைமுடி வேறு இருக்கிறது. ஒட்டப்பட்ட வலுவான தேங்காய் போல இருக்கிறது. அதற்குள் மூளை மிகவும் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கிறது. மண்டையில் விழும் சகல விதமான அடிகளையும் இது தாங்கிக் கொண்டு மூளையை காப்பாற்றுகிறது.


மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு 800 மில்லி ரத்தம் தேவைப் படுகிறது. உடலின் மொத்த எடையில் 50ல் ஒரு பங்கே அளவு கொண்ட மூளை, ரத்தம், ஆக்சிஜன் ஆகியவற்றின் மொத்த தேவையில் ஐந்தில் ஒரு பாகத்தை அபகரித்துக் கொள்கிறது. மூளை தூங்கினாலும், விழித்திருந்தாலும் பசி.. பசி... என்று அலறும் ராட்சத குழந்தை.


மூளைக்கு அவ்வளவு சக்திதேவை. தனக்கான சக்தியை சேமித்து வைத்து கொள்வதற்கு இடமில்லை. எனவே அதற்கு எப்போதும் ரத்தம் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கும். வெறும் 10 விநாடி ரத்த வரவு இல்லாமல் நின்று போனால்கூட மூளையால் தாங்கமுடியாது. உடனே மயக்கம் போட்டு விடும். திடீரென்று மனிதர்கள் மயங்கி விழுவது இப்படி ரத்தம் மூளைக்கு செல்வது தடைபடுவதால்தான். சில நிமிடம் ஆக்சிஜன் இல்லை என்றாலும் அவ்வளவுதான், அவர் மரணம் அடையும் நிலைக்கு சென்றுவிடுவார். அதாவது கோமா நிலைக்கு போய்விடுவார்.


இப்படி மூளை ராட்சத உணவு உண்டாலும் அதன் உணவுத் தேவை சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும். “எனக்கான உணவை(ஆக்சிஜனை) எப்போதும் குறைக்காதே, நான் அதை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்வேன்“ என்று இதயத்துக்கு கட்டளையிடும் மூளை, அதை செலவிடுவது குறைவு. உதாரணமாக மூன்று மணி நேரம் மூளையை கசக்கிப் பிழிந்து ஒரு கவிதை எழுதினால் அதற்கு மூளை எவ்வளவு சக்தி செலவழித்திருக்கும் தெரியுமா? ஒரு பட்டாணி அளவுதான் செலவு செய்திருக்கும். மூளை அப்படியொரு சுகவாசி.


எப்போதும் அது ஒரு சக்கரவர்த்தி போல் தண்ணீர் படுக்கையில் உல்லாசமாக மிதந்து கொண்டிருக்கிறது. இந்த மிதவையே, அதன் எடையை இருபது மடங்கு குறைத்துவிடுகிறது. இந்த திரவம்தான் நாம் எப்படி குதித்தாலும் மூளைக்கு ஒரு சின்ன அதிர்வுகூட ஏற்படாமல் பாதுகாக்கிறது. இந்த திரவம் இல்லையென்றால் தலையை திருப்பினாலோ, தலையை ஆட்டினாலோ வலி உயிர்போகும். உடலின் நிலைக்கு ஏற்ப இந்த திரவத்தின் அழுத்தம் மாறுபடும். மூளை அதிகமாக சாப்பிட்டாலும் உடலுக்கு மிக முக்கியமான உறுப்பு அதுதான்.

திங்கள், 20 ஜூன், 2011

தங்க ரெயில்

தங்க ரெயில் என்ற பெயரை கேட்டவுடன் இது முழுவதும் தங்கத்தால் ஆன ரெயிலோ என்று நினைத்து விட வேண்டாம்.

இந்த ரெயில் மற்ற ரெயில்களை போல் உருவாக்கப்பட்டதுதான். இந்த பெயர் வந்ததற்கு வரலாற்றில் சோகமான நிகழ்வு ஒன்று இருந்துள்ளது.

இரண்டாம் உலகப்போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த 1944-ம் ஆண்டு. ஹிட்லர் எதிரிநாடுகள் மீது கடும் தாக்குதல் நடத்திக்கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட யூதர்கள் அனைவரையும் கொன்று குவித்துக்கொண்டிருந்தார்.

அப்போது போர்முனையில் மட்டும் சுமார் 8 லட்சம் யூதர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

எந்த நேரத்தில் கொடூரமான மரணம் தங்களுக்கு ஏற்படுமோ என்று ஒவ்வொரு நிமிடத்தையும் பயத்தோடு அடிவயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு கழித்துக்கொண்டிருந்தனர் யூதர்கள்.

அந்த நேரம் பார்த்து ஹிட்லர் ஒரு அறிவிப்பு செய்தார். அதன்படி யூதர்கள் அனைவரும் தங்களிடம் இருக்கும் பணம், விலை உயர்ந்த பொருட்களையெல்லாம் கொடுத்து விட்டு தப்பித்து ஓடலாம் என்று அறிவித்தார்.

எப்படியாவது உயிர்வாழ்ந்தால்போதும் என்று முடிவு செய்த யூதர்கள், பல வருடங்களாக கஷ்டப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்திருந்த சொத்தையெல்லாம் தந்துவிட்டு பல யூதர்கள் ஓடிப்போனார்கள்.

இப்படி யூதர்களிடம் இருந்து திரட்டப்பட்ட, இல்லை பறிக்கப்பட்ட விலை உயர்ந்த பொருட்களை 42 ரெயில் பெட்டிகளில் ஏற்றிக்கொண்டு வந்தது அந்த ரெயில். இந்த ரெயில்தான் கோல்டன் ரெயில் என்று அழைக்கப்படுகிறது.

இந்த ரெயிலை ஜெர்மனிக்கு கொண்டு வந்தார் ஹிட்லர். இதில் பணம் மட்டுமல்லாமல் தங்கம், வைரம், வெள்ளி போன்ற ஏகப்பட்ட விலைஉயர்ந்த பல பொருட்கள் இருந்தன.

இன்றைக்கு நம் நாட்டில் ஓடும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அதிகபட்சமாக 21 ரெயில் பெட்டிகளை கொண்டதாக இருக்கிறது. இதன் நீளமே 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு இருக்கும்.

ஆனால் இந்த ஹிட்லர் கொண்டு வந்த இந்த ரெயில் எக்ஸ்பிரஸ் ரெயிலைபோல இரண்டு மடங்கு நீளமான ரெயிலாக இருந்தது. இந்த ரெயிலில் அத்தனை பொருட்களையும் ஏற்றிக்கொண்டு வந்தனர்.

இதன் மதிப்பு அந்த காலத்திலேயே 350 மில்லியன் டாலர். நம் பணத்துக்கு 17,500 கோடி மதிப்பு கொண்டது. இந்த ரெயில் ஜெர்மனிக்கு வந்து சேர்ந்த சில மாதங்களிலேயே ஹிட்லர் இறந்து விட்டார்.

அவர் இறந்த சில நாட்களிலேயே இரண்டாம் உலகப்போரும் முடிவுக்கு வந்தது. இந்த விலை மதிக்கமுடியாத, மதிப்பு மிக்க தங்க ரெயிலை நாங்கள் பாதுகாத்துக்கொள்கிறோம் என்று கூறி அமெரிக்கா இந்த ரெயிலை எடுத்துக் கொண்டு போய்விட்டது.

பொருட்களை பறிகொடுத்த யூதர்களின் வாரிசுகள் பல வருடங்களாக போராடி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ஓயாது பிரச்சினைகளை கொடுத்ததால் அமெரிக்க அரசு லேசாக அசைந்து கொடுத்தது.

2007-ம் ஆண்டில் தங்க ரெயிலில் அபகரிக்கப்பட்ட பொருட்களில் சில பொருட்கள் யூதர்களின் வாரிசுகளுக்கு திருப்பித்தரப்பட்டன. ஆனாலும் பெரும்பாலான பொருட்கள் இப்போதும் அமெரிக்கா வசமே உள்ளன.

திங்கள், 23 மே, 2011

நிஜமான ஸ்பைடர்மேன்

ஸ்பைடர்மேன் படங்களில் உயரமான கட்டிடங்களை அனாயசமாக தாண்டும் ஹீரோவை பார்த்து மலைத்துப்போன குழந்தைகளுக்கு, உண்மையில் ஒருவர் உயரமான கட்டிடங்களில் வெறும் கையால் பிடித்து ஏறுகிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கும்.
அந்த ஆச்சரியமான மனிதரின் பெயர் அலெய்ன் ராபர்ட்.


இவரது சராசரி வாழ்க்கையே சாகசங்கள் செய்வதுதான். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இவருக்கு பிரெஞ்ச் ஸ்பைடர்மேன், மனிதச்சிலந்தி என்ற ஏராளமான பட்டப்பெயர்கள், செல்லப்பெயர்கள் உள்ளன. எவ்வளவு உயரமான கட்டிடமாக இருந்தாலும் கருவியோ, பாதுகாப்பு உபகரணங்களோ இல்லாமல் கைகளை வைத்தே அதன் மீது ஏறி விடுவார்.


சின்னவயதில் இருந்தே இந்த பழக்கம் இவருக்கு ஆரம்பித்து விட்டது. இவருக்கு 12 வயது இருக்கும்போது வீட்டுச்சாவியை மறந்து வைத்து விட்டு வந்து விட்டார். ஆனால் அலெய்ன் பெற்றோரிடம் மற்றொரு சாவி இருக்கிறது. எனினும் அவர்கள் வரும்வரை காத்திருக்க இவரால் முடியவில்லை. எனவே தன் வீடு இருக்கும் 8&வது மாடியில் உள்ள பால்கனிக்கு சுவரை பிடித்தே ஏறி விட்டார். இதுதான் சாகசப்பயணத்தின் ஆரம்பம்.


அன்று முதல் எந்த கட்டிடமாக இருந்தாலும் அலெய்னுக்கு லிப்டோ, படிக்கட்டில் ஏறுவதோ பிடிக்காமல் போனது. ஜன்னல் கம்பி, ஸ்லாப் என எல்லாவற்றையும் தனது உபகரணமாக்கி ஏற ஆரம்பித்தார். கையில் வியர்த்தால், பையில் இருக்கும் சாக்பீஸ் பவுடரை தடவிக்கொண்டு, மீண்டும் ஏற ஆரம்பித்து விடுவார்.


ஈபிள் கோபுரம், பெட்ரோனஸ் கோபுரங்கள், உலகின் உயரமான தாய்பெய் கோபுரம் என பல இடங்களில் பிடி பிசகாமல் ஏறி சாதனை படைத்திருக்கிறார் அலெய்ன்.
கட்டிடங்களில் ஏறும்வரை ஆச்சரியத்தோடு வாய் பிளந்து நிற்கும் போலீஸ்காரர்கள், ஏறி முடிந்ததும் தற்கொலை முயற்சி என கைது செய்து விடுவார்கள். ஆனால் இரண்டே நாட்களில் வெளியே வந்து விடுவார் அலெய்ன். உள்ளே போகும்போது விலங்கிட்ட அதே போலீஸ்காரர்கள் வெளியே வரும்போது ஆட்டோகிராப் வாங்குவார்கள்.

1999- ல் சிகாகோவில் உள்ள வில்லிஸ் கோபுரத்தில் ஏறியதுதான் மிக மோசமான பயணம் என்கிறார் அலெய்ன். இந்த 110 மாடிக்கட்டிடத்தில் ஏறிக்கொண்டு இருக்கும்போதே பனி பெய்ய தொடங்கிவிட்டது.

கடைசி 20 மாடியின் ஜன்னல்கள் ஈரப்பதம் ஆகிவிட்டன. மிகவும் திணறிய அலெய்ன், கொஞ்சம் ஓய்வெடுத்து ஏறி முடித்திருக்கிறார்.

இதுவரை 7 முறை கீழே விழுந்திருக்கிறார் அலெய்ன். ஒவ்வொரு முறையும் பலத்த அடி. ஒரு முறை விழுந்ததில் அலெய்னின் 60 சதவீத உடல் பாகங்கள் ஊனமாகிவிட்டன.

இனி உங்களால் கட்டிடங்களில் ஏற முடியாது. முயற்சி செய்யாதீர்கள் என எச்சரித்தார்கள், டாக்டர்கள். ஆறே மாதங்கள்தான் ஓய்வு. உற்சாகமாக கைகளை தட்டியபடி ஏற தொடங்கிவிட்டார் அலெய்ன்.

அவரின் சிகரம் தொடும் சாதனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

ஏலம் எடுத்து கின்னஸ் சாதனை

கின்னஸ் சாதனை புரிவதற்காக பலரும் பலவிதங்களாக முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் எந் முயற்சியும் செய்யாமல் சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியாமல் கின்னஸில் இடம்பெறும் நிகழ்ச்சிகளும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

டைட்டானிக் கப்பல் விபத்து பற்றி நமக்கெல்லாம் தெரியும். ஆனால் டைட்டானிக் சம்பந்தப்பட்ட ஒன்று கின்னஸில் இடம் பெற்றது யாருக்கும் தெரியாது.

அமெரிக்காவின் லிலியன் அஸ்பிளன்ட் என்பவருக்கு ஐந்து வயது இருக்கும்போது அவரது தந்தை டைட்டானிக் கப்பலில் குடும்பத்தோடு பயணம் செய்ய டிக்கெட் வாங்கினார். நடுக்கடலில் கப்பல் மூழ்கியபோது லிலியன், அவருடைய அம்மா மற்றும் அவரது சகோதரர் மூவரும் தப்பினர்.

அந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 95 ஆண்டுகள் கழித்து லிலியன் அஸ்பிளண்ட் இறந்துபோக, அவர் பத்திரப்படுத்தி வைத்திருந்த டிக்கெட்டை உறவுக் காரர்கள் தேடி எடுத்து ஏலம் விட்டிருக்கிறார்கள். டைட்டானிக் கப்பலின் டிக்கெட் ஒன்று 33 ஆயிரம் பவுண்டுக்கு ஏலம்போனது.

பேன்சி நம்பர்களை ஏலம் எடுக்கும் முறை வெளிநாடுகளில் இருக்கிறது. கத்தார் நாட்டில் உள்ள கியூடெல் என்ற தொலைதொடர்பு நிறுவனம் பேன்சி நம்பர்களை ஏலம் விட்டது. அப்போது 6666 666 என்ற எண் கொண்ட செல்போன் எண்ணை 11 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறார் ஒருவர்.

உலகிலேயே அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட மொபைல்போன் எண் இதுதான். இதற்கு முன் இரண்டு கோடி ரூபாயக்கு ஒரு எண் விற்கப்பட்டதே உலக சாதனையாக இருந்தது.

அபூர்வமான ஒரு வைர ஏலம் கின்னஸில் இடம் பிடித்தது. ஜெனிவாவில் கடந்த ஆண்டு அபூர்வமான வைரமோதிரம் ஒன்று ஏலம் விடப்பட்டது. 24.78 காரட் மதிப்புள்ள இந்த வைரமோதிரம், இந்திய மதிப்பில் 170 கோடி ரூபாயாகும். இதற்கு முன்னர் 2008&ல் 35.56 கேரட் கொண்ட நீலவைரக்கல் 110 கோடிக்கு விற்பனையானது.

இந்த இரண்டு விலையும் கின்னஸ் சாதனையாக இருக்கிறது.
கால்பந்து ஒன்று கின்னஸில் வந்த சாதனையும் இருக்கிறது. 2010 -ல் கால்பந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டி நெதர்லாந்துக்கும், ஸ்பெயினுக்கும் இடையே நடந்தபோது பயன்படுத்தப்பட்ட கால்பந்து 74 ஆயிரம் டாலருக்கு விலைபோனது.

அடிடாஸ் நிறுவனம் தயாரித்த அந்த பந்து ஆன்லைன் ஏலத்துக்கு வந்தபோது 133 பேர் போட்டியிட்டார்கள். ஆனால் அதிர்ஷ்டசாலி ரசிகர் ஒருவருக்கு அடித்தது யோகம்.

இந்த பணம், வறுமையில் வாடும் குழந்தைகளுக்கும், எய்ட்ஸ் நோய் பாதித்தவர்களுக்கும் செலவிடப்படும் என உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நடத்திய தென்னாப்பிரிக்கா சொல்லி இருக்கிறது.

நீந்த தெரியாத நீர்யானை

திமிங்கலம், யானை, காண்டாமிருகம் போன்ற மிருகங்களுக்கு அடுத்தபடியாக பூமியில் வாழும் நான்காவது மிகப் பெரிய மிருகம் நீர்யானை. ஆறு, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளில்தான் இவை வாழும். இவற்றின் உடலில் இருந்து சிவப்பு நிற திரவம் ஒன்று வெளியேறிக்கொண்டே இருக்கும். பகல் நேரத்தில் நீருக்குள் இருக்கும் இந்த நீர் யானைகள் இரவானதும் நிலப்பரப்புக்கு வந்து மேயத்தொடங்கி விடும். தண்ணீரில் கூட்டமாக வாழ்ந்தாலும் மேய்ச்சலுக்கு போகும்போது தனித்தனியாகத்தான் போகும்.
நீர் யானைகள் பார்ப்பதற்கு பெரிதாக தெரிந்தாலும் அதன் கால்கள் மிகவும் குட்டையானவை. இதன் எடை 1,500 முதல் 3,000 கிலோ வரை இருக்கும். மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும். நீண்டதூரம் இதனால் ஓட முடியாது.
ஆப்பிரிக்க காடுகளில் இந்த இனம் உள்ளது. தற்போது ஒரு லட்சத்து 50 ஆயிரம் நீர் யானைகள் இருப்பதாக கணக்கெடுத்துள்ளார்கள். நீர் யானைகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று சாதாரண நீர்யானை. மற்றொன்று நைல் நீர் யானை. இது சுமார் 540 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த ஒரு மிருகம். இதன் மூதாதையர்களிடம் இருந்து இரண்டு மரபணுக்கள் உருவாகி ஒன்று திமிங்கலமாகவும், மற்றொன்று நீர் யானையாகவும் மாறின.
நீரில் வாழும் நீர் யானைகளுக்கு நீந்த தெரியாது என்பது ஆச்சரியமான ஒன்று. ஆனால் இவற்றுக்கு தனியான ஒரு வித ஈர்ப்பு விசை இருக்கிறது. அதன் துணைகொண்டு நீரின் அடியில் கூட நடக்கவும் ஓடவும் முடிகிறது. தங்களின் சிறப்பு ஈர்ப்பு விசையை பயன்படுத்தி நீருக்கு அடியில் செல்லும், மீண்டும் மேலே வரும். நீர்யானைகள் எப்போதும் நீருக்கு மேலேயே மிதந்து கொண்டு இருக்கும்.
சில நேரம் தங்கள் கால்களை உந்தி நீருக்கடியில் செல்லும். அல்லது 3 அல்லது 5 நிமிடம் வரை உள்ளேயே இருக்கும். பின் மேலே வந்து ஒருமுறை சுவாசித்து விட்டு மீண்டும் நீருக்கடியில் சென்று விடும். தண்ணீருக்கடியில் தூங்கும்போது கூட 5 நிமிடங்களுக்கு ஒருமுறை கண்ணை திறக்காமலேயே நீரின் மேல் பகுதிக்கு வந்து மூச்சுக்காற்றை வாங்கி மீண்டும் நீருக்கடியில் சென்று விடும். நீருக்கு மேலே வரும்போதுதான் இதன் மூக்கு துவாரம் திறக்கும். நீருக்குள் மூழ்கும்போது மூடிக்கொள்ளும். இவையெல்லாமே தானியங்கிபோல் கச்சிதமாக நடக்கின்றன.

உலகின் முதல் எஸ்.எம்.எஸ்.


எப்போதும் எதிலும் முன்னிலையில் இருக்க வேண்டும் என்பதுதான் அமெரிக்கர்களின் எண்ணம். அதை பல துறைகளிலும் நிரூபித்து உள்ளனர். அப்படி இருக்கும் போது செல்போனை மட்டும் விட்டு வைப்பார்களா? உலக அளவில் செல்போனை அதிகம் பயன்படுத்துபவர்கள் என்ற பெருமை இப்போது அமெரிக்கர்கள் வசம்தான் இருக்கிறது.
சராசரியான ஒரு அமெரிக்கர் மூன்றுக்கும் மேற்பட்ட செல்போன்களை பயன்படுத்துகிறார்கள். பரம ஏழையாக இருந்தாலும் அதிகபட்சமாக 18 மாதங்கள்தான் ஒரு செல்போனை உபயோகிக்கிறார்கள். அதற்கு மேல் அதை உபயோகிப்பது இல்லை. இதில் 2.3 சதவீதத்தினர் மட்டுமே தங்களது பழைய செல்போனை மறு சுழற்சி செய்கிறார்கள். மற்ற எல்லோருமே செல்போனை குப்பை தொட்டியில் வீசி எறிகிறார்கள் என்று அமெரிக்க சர்வே ஒன்று சொல்கிறது.
ஒரு வருடத்திற்கும் மேலாக செல்போனை உபயோகிக்கும்போது அந்த செல்போனில் உள்ள கேட்மியம், லெட், பெரிலியம் போன்ற தனிமங்களால் நோய் எதிர்ப்பு சக்தி, நரம்பு மண்டலம், மூளை, ஈரல், நுரையீரல் போன்றவை எளிதாக பாதிக்கப்படும். இதனால் அமெரிக்காவில் அடிக்கடி செல்போனை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.
தற்போதைய நிலவரப்படி 250 ஆயிரம் டன் எடை கொண்ட 55 கோடி செல்போன்கள் குப்பைத் தொட்டிக்கு வர காத்திருக்கின்றன. இந்த வருடம் மட்டும் 55 லட்சம் செல்போன்கள் புதிதாக பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றன. இவை கிட்டத்தட்ட 75 சதவீத உலக மக்கள் தொகைக்கு சமம் என்று சர்வதேச தகவல் தொடர்பு சம்மேளனம் தெரிவிக்கிறது.
1973ல் முதன்முறையாக செல்போனை உபயோகப்படுத்தியவர் டாக்டர் மார்ட்டின் கூப்பர். 1992 முதல் எஸ்.எம்.எஸ். என்ற குறுஞ் செய்தி அனுப்பும் வசதி செல்போனில் அறிமுகப்படுத்தப்பட்டது. நீல்டேப்வொர்த் என்பவர் தனது நண்பனுக்கு அனுப்பிய “மேரி கிறிஸ்துமஸ்“ என்பதுதான் உலகின் முதல் எஸ்.எம்.எஸ். ஆகும். இது 1992&ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24&ந் தேதி அனுப்பப்பட்டது.
இன்று அமெரிக்காவில் நாளொன்றுக்கு 5 லட்சம் எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இது மக்கள் தொகையில் முன்னணியில் இருக்கும் சீனா, இந்தியா போன்ற நாட்டு மக்கள் பயன்படுத்துவதை விட அதிகம்.

ஹார்ட்அட்டாக்கை தெரிவிக்கும் செல்போன்

உலக மக்கள் தொகையில் 30 சதவீத மரணங்களுக்கு ஹார்ட்அட்டாக் தான் காரணம் என்கிறது ஒரு புள்ளிவிவரம். ஒருவருக்கு ஹார்ட்அட்டாக் ஏற்பட்டவுடன், பதற்றத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திக்கி திண்டாடும் அந்த நிமிடங்கள்தான் தங்கத்தருணம். அந்த சமயம் உடனடியாக முதலுதவி அளிக்கப்படுபவர்கள் பிழைத்துக்கொள்கிறார்கள்.
ஆனால் எப்போது, யாருக்கு ஹார்ட்அட்டாக் வரும் என்று எப்படி கணிப்பது? அதற்கு கைகொடுக்க இருக்கிறது மினியேச்சர் ஈ.சி.ஜி.மிஷின் பொருத்தப்பட்ட செல்போன். உங்கள் சட்டைப்பாக்கெட்டில் இருக்கும் இந்த மொபைல், உங்களின் இதய துடிப்புகளை சென்சார் செய்தபடியே இருக்கும். ஹார்ட் அட்டாக் சமயம் அலர்ட் ஆகி தானாகவே மொபைலில் பதிவு செய்யப்பட்டு இருக்கும் தகவலை டாக்டருக்கு இந்த மொபைல் அனுப்பிவிடும்.
உடனே நோயாளியையோ உறவினரையோ டாக்டர்கள் தொடர்பு கொண்டு உடனடி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து விடலாம். அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் அட்வான்ஸ் கம்ப்யூட்டிங் டெக்னாலஜி டைரக்டர் ஆலன்சிசெஞ்ச், உண்மையில் அவ்வளவு பெரிய ஈ.சி.ஜி.இயந்திரத்தை கையடக்கத்தில் கொண்டு வந்ததுதான் பெரியசாதனை என்கிறார்.
ஆராய்ச்சி அளவில் இருக்கும் இந்த திட்டம் வெற்றி அடைந்தால் இந்த தொழில் நுட்பத்தையும் சாப்ட்வேரையும் இலவசமாக அளிக்கப்போவதாக இந்த திட்டத்துக்கு நிதி உதவி அளித்து வரும் மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது வந்து விட்டால் நோயாளிகள் பற்றிய தகவல் சரியான நேரத்தில் டாக்டருக்கு போய்விடும். இதன் மூலம் அந்த ஆபத்தான தருணத்தில் இருந்து நோயாளிகள் காப்பாற்றப்படுவார்கள். இதனால் ஹார்ட்அட்டாக் மூலம் இறப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் வாய்ப்புள்ளது.

ராணுவ கார்ட்டூன்

குழந்தைகளுக்கான கார்ட்டூன் படங்களை வரைந்து புகழ் பெற்றவர் வால்ட் டிஸ்னி. இவரை அமெரிக்க ராணுவம் கார்ட்டூன் வரைய சொல்லிக் கேட்டது. 1942-ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்தபோது அமெரிக்க கடற்படை தளபதி ஈ.எஸ்.கால்டுவெல் மஸ்கிடோ போர்ஸ் என்ற புதிய படைப்பிரிவை உருவாக்கினார். அதற்கு ஒரு சின்னம் தேவை என்று நினைத்தபோது அவரது நினைவுக்கு வந்தவர் வால்ட் டிஸ்னிதான்.
உடனே கடற்படை தளபதி டிஸ்னிக்கு ஒரு கடிதம் எழுதினார். தளபதியின் கோரிக்கையை தட்ட முடியுமா? ஒரு குண்டின் மேல் நீரை கிழித்து செல்லும் கொசு படத்தை வரைந்து அனுப்பினார். அந்த படத்தை ஒவ்வொரு படகிலும் வரைய செய்தார் கடற்படை தளபதி. படத்தை பார்த்த கடற்படை வீரர்கள் உற்சாகமாக போருக்கு கிளம்பினார்கள்.
இந்த உற்சாகம் அமெரிக்க ராணுவத்தின் ஒவ்வொரு பிரிவுக்கும் வேண்டுமென்று அந்தந்த பிரிவின் தளபதிகள் விருப்பப்பட, ஒவ்வொரு பிரிவிலும் இருந்து டிஸ்னிக்கு கடிதம் போனது. தனியொரு ஆளாக இதை எப்படி செய்வது என்று எண்ணிய டிஸ்னி ஐந்து பேரை வேலைக்கு அமர்த்தினார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்ட்டூன் சின்னங்களை வரைந்தார்.
இதற்காக டிஸ்னி ஒரு பைசா கூட சம்பளமாக வாங்கவில்லை. அமெரிக்க படைகளின் சின்னங்களை பார்த்து விட்டு அவர்களோடு சேர்ந்து போரிட்ட பிரிட்டன், போலந்து, நியூசிலாந்து நாட்டு ராணுவமும் அவர்கள் படைகளுக்கும் படம் வேண்டி டிஸ்னிக்கு கடிதம் எழுதினார்கள்.
ராணுவத்தில் சேரச்சொல்லி மக்களை அழைப்பதற்கு ஒரு படம், ராணுவத்தின் பெருமையை சொல்வதற்கு ஒரு படம், மருத்துவம் பார்க்க வரச்சொல்லி டாக்டர்களுக்கு ஒரு படம் என்று விதவிதமாக தினுசு தினுசாக வரைந்து தள்ளியது டிஸ்னி குரூப்.
இது தவிர எதிரிகளை கிண்டலடித்து நிறைய கார்ட்டூன்களை போர்க்கருவிகளில் வரைந்து அனுப்பினார்கள். ஒரு கார்ட்டூனில் சாத்தானுக்கு அருகே 1, 2, 3 என்ற எண்களின் கீழ் ஹிட்லர், டோஜோ, இல் டியூஸ் ஆகிய மூவரின் பெயரும் இருக்கும். அவர்களை எண்ணை சட்டியில் போடவா, உயிரோடு வேகவைக்கவா? என்று சாத்தான் கேள்வி கேட்பதை போன்று இருக்கும் படத்தை பார்த்து குஷியான அமெரிக்க வீரர்கள், ஜெர்மனி மீது படம் வரைந்த குண்டுகளையே போட்டார்கள்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த ஹிட்லரின் நாஜிப்படையை சேர்ந்த ஒருவர் ஜெர்மனி விமானத்தில் அமெரிக்கா போல விமானத்தின் மீது மிக்கி மவுஸ் கார்ட்டூனை வரைந்து அமெரிக்க விமானம் போல மாற்றினார். தங்களது விமானம்தான் வருகிறது என்று கார்ட்டூனை பார்த்து அசால்டாக இருந்த அமெரிக்க படைகளின் மீது கொத்துக்கொத்தாக குண்டுகளை போட்டனர். பெருத்த சேதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட டிஸ்னி முதன்முறையாக ராணுவத்துக்காக கார்ட்டூன் வரைந்ததற்கு வருத்தப்பட்டார். அதன்பின் ராணுவத்துக்காக கார்ட்டூன் வரைவதில்லை என்ற முடிவை எடுத்தார்.

திங்கள், 28 மார்ச், 2011

உளவாளி பெண்கள்


பெண்களிடம் ரகசியம் தங்காது என்று சொல்வார்கள். ஆனால் அதெல்லாம் ஒரு காலம்தான். ரகசியத்தை கட்டிக்காக்கும் உளவுத்துறையிலேயே பெண் உளவாளிகள் இருந்திருக்கிறார்கள்.

அமெரிக்காவில் இருந்து பிரிந்த 11 மாகாணங்கள் ஒன்றாக இணைந்தன. அப்படி இணைந்த மாகாணங்களை கான்பிடரெசி என்று அழைத்தனர். மற்ற மாகாணங்களை யூனியன் என்று அழைத்தார்கள். 1860களில் அமெரிக்காவில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தத்திற்கு இதுதான் காரணம்.


அப்போது கான்பிடரெசி யின் உளவாளியாக நான்சிஹார்ட் என்ற பெண் செயல்பட்டார். போதை பொருளை கடத்தும் பெண்ணாக செயல்பட்டு மற்ற அமெரிக்க மாகாணங்களின் ராணுவ ரகசியங்களை உளவறிந்து வெளியிட்டார்.

கொஞ்ச நாட்களிலேயே அவர் கைதானார். அப்போது நான்சிக்கு 20 வயதுதான் ஆகி இருந்தது. இளமை பொங்க வலம் வந்த நான்சி, ஜெயில் வார்டனிடம் நைசாக பேசி, அவனது துப்பாக்கியை வாங்கி, அவனையே சுட்டுக்கொன்று தப்பித்தார். சிவில் போர் முடிந்தபிறகு திருமணம் செய்து விர்ஜினியாவில் குடியேறினார்.

இவரைப்போலவே பாலின் குஷ்மேன் என்ற பெண் அதே அமெரிக்காவில் சிவில் யுத்தத்தில் யூனியன் ஆர்மியின் உளவாளியாக செயல்பட்டார். ஒரு நடிகைபோல் நடித்து உளவுபார்த்தார்.

எதிரிகளின் ரகசியங்களை தனது ஷூவில் வரைந்து வைத்துக்கொள்வது இவரது ஸ்டைல். உளவு விஷயம் வெளியில் தெரிந்து எதிரிகளிடம் மாட்டிக்கொண்டார். இவருக்கு தூக்கு தண்டனையும் உறுதியானது. தூக்கில் போடுவதற்கு 3 நாட்களுக்கு முன், யூனியன் படைவீரர்களால் இவர் காப்பாற்றப்பட்டார்.

திறமை மிகுந்த இந்த உளவாளிப்பெண்ணை அன்றைய அமெரிக்க அதிபர் லிங்கன், மேஜராக பதவி உயர்த்தினார்.


இரண்டாம் உலகப்போரின்போது பிரான்ஸ் நாட்டில் வேவுபார்த்தார் வர்ஜினியா ஹால் என்ற பெண். நாஜிக்களின் முகாம்களுக்குள்ளேயே தில்லாக புகுந்து தகவல்களை கொண்டு வரும் கில்லாடி.

நாஜிக்கள் இவரை கைது செய்ய முயற்சித்தனர். அதிலிருந்து விடுவித்து தப்பி ஓடினார். ஓடும்போது வழியில் கல் இடுக்கில் கால் மாட்டி ஒடிந்து போனது. ஒடிந்த காலோடு தப்பிவிட்டார்.

பிறகு கொஞ்ச நாட்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். அதன்பின் 1943&ல் ஒரு பால்காரி போல் வெளிவந்தார். மீண்டும் உளவு வேலைகளை பார்க்க தொடங்கினார். இதை மோப்பம்பிடித்த நாஜிக்களின் ரகசிய போலீசான கெஸ்டாபோ ஒரு விளம்பரம் செய்தது.

அதில் ஒரு காலை இழந்த பெண் ஒருத்தி மரக்காலுடன் வேவுபார்க்க நமது எல்லைக்குள் வந்திருக்கிறாள். அவளை நாம் கொல்ல வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. விளம்பரத்தை பார்த்த வர்ஜினியா மரக்காலை தூக்கி எறிந்தார். அவற்றின் உதவியில்லாமல் நடக்க பழகிக்கொண்டார்.

யுத்தம் முடிந்ததும் அவருக்கு அமெரிக்காவின் மிக உயரிய விருது வழங்கப்பட்டது. டிஸ்டிங்குஷ்டு சர்வீஸ் கிராஸ் என்ற விருது பெற்ற ஒரே சிவிலியன் பெண் இவர்தான்.

இப்படியாக பெண்கள் உளவாளிகளாகவும் சாதித்துள்ளனர். பெண்களிடம் ரகசியம் தங்காது என்ற பழைய பழமொழியை இனியாவது விட்டுத்தள்ளுங்கள்!

புதன், 23 பிப்ரவரி, 2011

உளவாளியின் மொழி


உளவாளியாக எதிரியின் இடத்துக்கோ, அல்லது நாட்டுக்கோ சென்று உளவறிவதைவிட, ரகசியமாக தெரிந்த தகவலை பத்திரமாக கொண்டு சேர்ப்பதுதான் மிகவும் கடினமான வேலை.

இடையில் யாராவது ஒட்டுக் கேட்டாலும், செய்தி வேறு ஒருவர் கையில் கிடைத்துவிட்டாலும் என்ன தகவல் என்று தெரிந்து கொள்ள முடியாத மொழியில் அது இருக்கும்.

தகவல் தருபவர், தகவல் பெறுபவர் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய மொழி. இத்தகைய மொழிக்குத்தான் ‘கிரிப்டோ கிராபி‘ என்று பெயர்.
இந்த மொழி கி.மு.1900-ம் ஆண்டில் இருந்தே நடைமுறையில் இருந்திருக்கிறது.

எகிப்தில் உள்ள பிரமிடுகள் ஒன்றில் செதுக்கப்பட்டிருந்த ஒரு வாக்கியம்தான் கிரிப்டோகிராபியின் ஆரம்பம். முன்பெல்லாம் எழுதப்படிக்க தெரிந்தவர்கள் மிகமிக குறைவு. அதனால் ரகசிய தகவல்களைகூட எல்லோரும் புரிந்து கொள்ளும் விதத்தில் நேரடியாகவே எழுதி அனுப்பினர்.

படித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபின் விடுகதைகள், கவிதைகள் போன்றவற்றின் மூலம் தகவல்கள் பரிமாறப்பட்டன. அதன்பின் எழுத்துக்களை முன்&பின்னாக மாற்றி அமைத்து தகவல் அனுப்பினார்கள்.

உதாரணமாக DEVI என்ற பெயரை EFWJ என்று அனுப்புவார்கள். இது வேறு யாருக்கும் தெரியாது. ஆனால் தகவல் பெறுபவர்களுக்கு தெரியும். எல்லா எழுத்துக்களுக்கும் முந்தைய எழுத்துகளை எழுதிக்கொண்டே வந்தால் அவர்கள் சொல்லும் தகவல் விளங்கிவிடும்.

ஜூலியஸ்சீசர் அந்த காலத்திலேயே ஒரு முறையை வைத்திருந்தார். அதற்கு சீசர் சைபர் என்று பெயர். போர்க்களத்தில் இருக்கும் தளபதிகளுக்கு வார்த்தைகளை கலைத்துப் போட்டு கடிதம் அனுப்புவார். இன்னொரு காவலாளி மூலம் அதை எப்படி படிக்க வேண்டும் என்ற குறிப்பை கொடுத்து அனுப்புவார்.

இரண்டு பேரும் எதிரிகள் கையில் ஒரே நேரத்தில் சிக்கினால் மட்டுமே எதிரியால் சீசர் என்ன செய்தி கொடுத்து அனுப்பினார் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

ஹெரோ டோட்டஸ் என்பவர் வேறு ஒரு முறையை பயன்படுத்தினார். இவர் சொல்ல விரும்பும் செய்தியை ஓர் அடிமையின் தலையில் பச்சைக்குத்தி விடுவார். முடி வளர்ந்தபின்தான் அந்த செய்தியை சொல்லக் கிளம்புவான்.

தகவலை பெறுபவர் அடிமையை மொட்டை அடித்து தகவலை படித்துக் கொள்ள வேண்டும்.

நவீன காலத்தில் கம்ப்யூட்டர் வந்தபின் தகவல்களை மறைப்பதும், கடத்துவதும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. சரியான பாஸ்வேர்டு, அல்லது கீ வேர்டு இருந்தால்தான் தகவலை திறக்கவே முடியும்.

இப்போதெல்லாம் டிஜிட்டல் கையெழுத்து, கண்ணுக்கு தெரியாத இன்விசிபிள் இங்க் என்று எவ்வளவோ வந்துவிட்டன.

இதே கிரிப்டோகிராபி முறையில்தான் ஏ.டி.எம். மெஷின்கள், இ-மெயில் பாஸ்வேர்டுகள் நிர்வகிக்கப்படுகின்றன. ஒரு ஏ.டி.எம். கார்டோ, இ-மெயில் அக்கவுண்டோ வைத்திருந்தால் நாமும் ஓர் உளவாளிதான்.

நமது ரகசியங்களை பாதுகாக்கும் உளவாளி. அவ்வளவுதான்.

கண்ணுக்கு கண் தண்டனை


ஈரானில் ஒருவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை என்று கூறிவிட்டால் அவ்வளவுதான். குற்றவாளியை பொதுவான இடத்தில் நிறுத்தி வைத்து சுற்றிலும் மக்கள் நின்று கல்லால் அடித்துக் கொன்று விடுவார்கள்.

இதற்காகவே இது போன்ற இடங்களில் கற்களை குவியலாக வைத்து இருப்பார்கள். குற்றவாளியானவர் பெண் என்றால், மண்ணில் குழிதோண்டி மார்பளவு உயரத்துக்கு மேலே தெரியும்படி நிறுத்தி, மூடி விடுவார்கள்.

மண்ணுக்கு மேலே தெரியும் இடங்களில் கல்லால் அடிப்பார்கள். அடுத்தடுத்து தபதபவென்று வந்து விழும் கற்களால் மண்டை உடைந்து ரத்தம் கொட்டி குற்றவாளி இறந்து விடுவார்.

ஒரு வேளை ஆயுள் கெட்டி மனிதர்கள் இறக்காமல் இருந்து விட்டால், அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஆயுள்தண்டனை கைதியாக சிறையில் இருக்க வேண்டும்.

ஆப்கானிஸ்தானுக்கு தலிபான்கள் போல மலேசியாவுக்கு ஷரியா என்ற அமைப்பு, தப்பு செய்தால் தண்டனை கொடுக்கும். பீர் குடித்தால், ஒருவரை அடியாட்களை வைத்து அடித்தால், தண்டனை நிச்சயம் உண்டு.

பிரம்பால் அடிப்பதுதான் தண்டனை. சுற்றிலும் மக்கள் கூட்டம் நிற்க, குற்றவாளிக்கு பிரம்படி வழங்கப்படும். பிரம்பால் அடித்தே தோலை உரித்து விடுவார்கள். ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்சம் ஆயிரம் பேராவது பிரம்படி தண்டனையை பெறுகிறார்கள்.

பிரம்புக்குச்சியால் அடிப்பதற்கு முன்பே அதை உப்புத்தண்ணீரில் ஊறவைத்து விடுகிறார்கள். அப்படி செய்தால்தான் அடிக்க வசதியாக இருக்குமாம். வலியும் தாங்க முடியாத அளவுக்கு போகுமாம். கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்கிற தண்டனை இன்னமும் சவுதி அரேபியாவில் உண்டு.

சவுதியில் வாழ்ந்த இந்தியர் ஒருவர், அங்கிருக்கும் அரேபிய குடிமகனோடு சண்டை போட்டார். அப்போது எதிர்பாராமல் அவரது கை சவுதி அரேபியரின் கண்ணில் பட்டு விட்டது.

கொஞ்ச நாட்களில் பார்வையும் போய்விட்டது. பாதிக்கப்பட்டவர் நீதிமன்றம் சென்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்தியரின் கண்களை தோண்டி எடுக்கும்படி உத்தரவிட்டார்கள்.

இதே போல் ஈரானிலும் ஒரு தண்டனை வழங்கப்பட்டது. 27 வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் கோபத்தில் தனது அழகான காதலியின் முகத்தில் திராவகம் ஊற்றிவிட்டார். வலி பொறுக்க முடியாமல் உருக்குலைந்த முகத்தோடு நீதிமன்ற படியேறினாள், காதலி.

வழக்கை விசாரித்து முடித்த நீதிமன்றம், ஆசிட்டின் வேதனை எவ்வளவு கொடூரமானது என்பதை அந்த காதலனுக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக அந்த பெண்ணின் கண் முன்பாகவே, அந்தக்காதலனின் கண்களில் சொட்டுச்சொட்டாக ஆசிட்டை ஊற்றும்படி தீர்ப்பு வழங்கியது. தண்டனை நிறைவேற்றப்பட்டது.

காதலனின் கண்களும் முகமும் காதலியை போலவே சிதைந்து போயின.
கடுமையான தண்டனைகள்தான் குற்றத்தை குறைக்கும் என்பார்கள்.

அரபு நாடுகளில் குற்றங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு தயவு தாட்சண்யம் பார்க்காத இதுபோன்ற கொடூர தண்டனைகள் மிக முக்கியமான காரணமாக இருக்கின்றன.

கட்டுக்கடங்காத காட்டுத் தீ


உலகமெங்கும் உள்ள மொத்த காடுகளின் வில்லன் யார் தெரியுமா? காட்டுத்தீ தான். மின்னல், எரிமலை, பாறைச்சரிவால் ஏற்படும் உராய்வுகள், சிறு தீப்பொறிகள் இவைகள் காட்டுத்தீ உருவாக முக்கிய காரணங்களாக இருந்தன.

ஆனால் இப்போது மக்கிய குப்பைகளின் வாயுக்களும் அணைக்கப்படாத சிகரெட் துண்டுகளும் காட்டுத்தீக்கு வழிவகுக்கின்றன.


கிட்டத்தட்ட 42 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்தே காட்டுத்தீ, காடுகளை அழித்து வந்திருக்கிறது. எதிரிகளின் ஊடுருவலை தடுக்க அந்த காலத்தில் ராணுவத்தினர் காட்டுக்கு தீ வைப்பதை பழக்கமாக கொண்டு இருந்திருக்கின்றனர்.

மரங்கள் இருக்கும் இடங்களில் இயற்கையாகவே அதிக அளவில் சுத்தமான ஆக்ஸிஜன் இருக்கும். அதுவே தீ கொளுந்து விட்டு எரியவும் காரணமாகி விடுகிறது. காடு தீப்பற்றிக்கொண்டு எரிய தொடங்கியதுமே அந்த பகுதியில் வீசும் காற்றின் வெப்பம் 800 டிகிரி செல்சியஸ் வரை கூடும்.

வெப்பமான இடங்களில் இருக்கும் மரங்களின் நீர் ஆவியாகிவிடுவதால், மரங்கள் எல்லாம் ஈரப்பதம் இல்லாமல், காய்ந்த விறகுக்கட்டைகள் போல் மாறி விடும்.
காட்டுத்தீயின் வேகம் மணிக்கு 10 கிலோ மீட்டர் என்ற அளவில் இருக்கும். அதுவே புல்வெளி என்றால் 22 கிலோ மீட்டர் வேகத்தில் பரவும். புயல், பெரும் காற்று வீசும் சமயங்களில் கேட்கவே வேண்டாம்.

காட்டுத்தீயை கட்டுப்படுத்த அது பரவும் திசைக்கு எதிர்திசையில் தீ வைப்பதுதான் தீர்வு. காட்டுத்தீ பரவும் திசைக்கு எதிர்திசையில் தீ வைத்துவிட்டால் அந்த இடத்தில் இருக்கும் மரம், மட்டைகள் கருகி தீய்ந்து விடும்.


காற்றின் போக்குக்கு வேகமாக பரவி சீறிவரும் காட்டுத்தீ, அந்த இடத்திற்கு பற்றி பரவ மரங்கள் மிச்சம் எதுவும் இருக்காது. இதனால் காட்டுத்தீயின் வேகம் கலைந்து அது அணைந்து விடும்.

ஆனால் காற்றின் திசைக்கு ஏற்ப காட்டுத்தீ திசை மாறிக்கொண்டே இருக்கும் என்பதால் அது எந்த திசைகளில் எல்லாம் பரவும் என்பதையும் எளிதில் கணிக்க முடியாது. சில நாடுகளில் சில்வர் அயோடைட் பொடிகளை ஹெலிகாப்டர் மூலம் தூவி செயற்கை மழையை உருவாக்கி காட்டுத்தீயை கட்டுப்படுத்துவார்கள்.

காட்டுத்தீ சில நாடுகளின் பொருளாதாரத்தையே ஆட்டம் காண வைத்திருக்கின்றது. இது மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தீ பிடித்து எரிவதால் ஏற்படும் கரியமில வாயுக்கள் சுற்றுச்சூழலுக்கும் பெரிய அளவில் தீங்கை ஏற்படுத்துகின்றன.

காட்டுத்தீ தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தால் வெப்ப புயல் உருவாகும். இது உலகின் பருவநிலை மாற்றத்துக்கும் முக்கிய காரணமாக அமைந்து விடும்.
2030-ம் ஆண்டு இறுதிக்குள் அமேசான் காடுகளில் 55 சதவிகித அளவுக்கு காட்டுத்தீயால் அழிந்து போய்விடும் என்று எச்சரிக்கிறார்கள்.

காட்டுத்தீயை கட்டுப்படுத்தவும், புவி வெப்பத்தை தடுக்கவும் அதிகமான மரங்கள் வளர்ப்பதுதான் தீர்வு. எனவே மரங்கள் நடுவோம்! பூமியை காப்போம்!

திங்கள், 24 ஜனவரி, 2011

நிமிர்ந்த நடை


மனிதன் மற்ற விலங்குகளில் இருந்து வேறுபட்டு இருக்க ஒரேயொரு காரணம் இருக்கிறது. மனிதன் என்ற ஒரு விலங்கால்தான் நிமிர்ந்து நிற்க முடியும். மற்ற உயிரினங்களால் இது முடியாது.

மனிதனும், கிப்பன் குரங்குகளும்தான் இரண்டு கால்களால் நடப்பவை. வேறு எந்த விலங்கும் பின்னங்கால்களை மட்டுமே உபயோகித்து நடப்பதில்லை. மனிதனுக்கு மிகவும் நெருங்கிய உறவான கொரில்லா கூட லேசாக கூன்விழுந்ததுபோல் முன்னோக்கி வளைந்துதான் நிற்கும். மனிதனை போல் நேர்கோடாக நிற்க முடியாது.

இந்த நிமிர்ந்த நன்னடை மனித உடலில் ஏராளமான மாற்றங்களை செய்திருக்கிறது. மற்ற நாலுகால் விலங்குகளை போல் முகம், தலையை பார்க்காமல் முன்னோக்கி நிமிரும் நிலை ஏற்பட்டது. முதுகெலும்பு, இடுப்பெலும்புகள், கால் எலும்புகளில் மாற்றம் ஏற்பட்டது. இரண்டு கால்களால் நிமிர்ந்து நடக்க, நடக்க பெருவிரல் என்ற கட்டைவிரல் வித்தியாசமான வடிவம் பெற்றது.

பின்கால்களை மட்டும் பயன்படுத்தி நடப்பதால் முன்கால்களை வேறுவிதமான வேலைகளுக்கு பயன்படுத்த முடிந்தது. அவற்றை கொண்டு பல கருவிகளை கண்டுபிடித்தான். இந்த கருவிகளின் செயல்பாட்டுக்கு வசதியாக கைவிரல்களுக்கு எதிராக கட்டைவிரல் உருமாற்றம் அடைந்தது.

சில குரங்குகளுக்கு கட்டைவிரல் இருக்கிறது. ஆனால் மனிதன் அளவுக்கு அவை முழு வளர்ச்சி பெறவில்லை. கைவிரல்களை கட்டைவிரலுக்கு எதிராக மனிதன் கொண்டு வராவிட்டால் இத்தனை கருவிகளை பயன்படுத்தியிருக்க முடியாது. கருவிகளை மனிதன் பயன்படுத்த தொடங்கியபின்தான் மூளையில் சிந்தனை பிரிவுகள் வளர்ச்சி பெற்றன.
கொரில்லாவை போல் இல்லாமல் மனித உடலில் குறைவான ரோமம் இருப்பது மற்றொரு சிறப்பாகும். மார்பிலும் உடலின் சில பகுதிகளிலும் ஓரளவு ரோமங்கள் இருந்தாலும் குரங்கைப்போல் ஒரே போர்வையாக இல்லை.

மனிதனின் கண்கள் இரண்டும் முன்னோக்கி அருகருகே அமைந்துள்ளன. இதனால் கண்களுக்கிடையே உள்ள இடைவெளி குறைந்து அலகிட்டு கூர்மையாக உள்ளது. மனித இனத்திற்கும் மற்ற இனங்களுக்கும் இது முக்கியமான வேற்றுமையாகும்.


குரங்கில் இருந்துதான் மனிதன் பரிணமித்தான் என்று டார்வின் கூறினார். இதை மதவாதிகள் எதிர்த்தனர். அறிவாளிகள் ஏற்றுக்கொண்டனர். ஆனாலும் மனிதனுக்கும் குரங்கிற்கும் மத்தியில் உள்ள இணைப்பு எங்கே என்று கேட்டனர். அந்த இணைப்பை கண்டுபிடிக்காமல் அதை ஒப்புக்கொள்ள முடியாது என்று கருதினர்.

ஜாவாதீவில் உராங்குட்டான் என்ற குரங்கினம் ஏராளமாக உள்ளது. டூபி என்ற டச்சுப்பேராசிரியர், குரங்கு மனிதனை கண்டுபிடிக்க ஜாவா சென்றார். ஆராய்ச்சியில் இறங்கினார். அங்கு கோலோ என்ற ஆற்றின் கரையில் திரினுல் என்ற இடத்தில் மண்டை ஓடுகளையும், தொடை எலும்புகளையும் கண்டுபிடித்தார். விடுபட்டுப்போன பரம்பரையை கண்டுபிடித்து விட்டேன் என்று அறிவித்தார்.

குரங்கினத்தில் இருந்து தோன்றிய முதல் மனிதன் இவன்தான் என்றார். அந்த மனிதனுக்கு பித்தகாந்த் ரோரெக்ட்ஸ் என்று பெயர் சூட்டினார். பித்தகேர் என்றால் கிரேக்க மொழியில் குரங்கு என்று பொருள். அந்தரோபஸ் என்றால் மனிதன் என்றும், ரெக்ட்ஸ் என்றால் நிமிர்ந்து என்றும் பொருள்படும்.

அதாவது நிமிர்ந்து நடக்கும் மனிதன் என்ற அர்த்தத்தில் மனித குலத்தின் முதல்வன் இவனே என்ற டூபி, அவனுக்கு ஜாவாமனிதன் என்றே பெயரிட்டார்.

வியாழன், 6 ஜனவரி, 2011

அதிசயங்களின் ரகசியம்


உலகில் இருக்கும் ஒவ்வொரு அதிசயமும் விளங்க முடியாத ரகசியத்தை கொண்டுள்ளது.

பிரமிடுகள் தனக்குள் கொண்டிருக்கும் ரகசியத்திற்கு இன்னும் விடைகிடைக்கவே இல்லை. பிரமிடுகளில் மிகப்பெரிய பிரமிடான "கிஸா" பிரமிடு 23 லட்சம் கற்களால் கட்டப்பட்டது.

ஒவ்வொரு கல்லும் 2 முதல் ஒன்பது டன் வரை எடை கொண்டது. இந்த கற்களை எங்கிருந்து எப்படி இழுத்து வந்தார்கள்; ஒன்றின் மீது ஒன்றாக எப்படி ஏற்றினார்கள் என்பது இன்னும் மர்ம முடிச்சாகவே உள்ளது.

இந்த அளவுக்கு கற்களை தோண்டி எடுத்தால் பிரமாண்டமான பள்ளங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் பலமைல் சுற்றளவிற்கு எந்த ஒரு பெரிய பள்ளமும் இல்லை.

இதைப் போலவே 1947 -க்கும் 1956-க்கும்இடைபட்ட காலத்தில் பாலஸ்தீனத்தின் மேற்கு பகுதியில் உள்ள கும்ராம் மலைக்குகையில் இருந்து 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான 900 ஆவணங்கள் கிடைத்தன.

மெல்லிய செப்பு தகடுகளில் எழுதப்பட்ட இவை சாக்கடல் சுருள்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஹீப்ரு மொழியில் எழுதப்பட்ட இந்த சுருள்கள் ஒவ்வொன்றும் ஒரு ரகசியம். தங்கப்புதையலுக்கான தகவல்கள். புதையல் கரிசிம் மலையில் இருக்கிறது என்கிறது ஒரு சுருள். ஆனால் கரிசிம் மலை எது என்பதுதான் யாருக்கும் விடைதெரியாத வினா.

இலக்கியமும், சினிமா பாடல்களும், வரலாறும் அலசி காயப்போட்ட Ôபாபிலோனின் தொங்கும் தோட்டம்Õ எங்கே இருக்கிறது? என்பதே ஒரு ரகசியம்தான். கி.மு. 4 00- ல் பெரோசஸ் என்பவர்தான் முதன்முதலாக பாபிலோன் தொங்கும் தோட்டம் பற்றி எழுதினார்.

பாக்தாத்துக்கு பக்கத்தில் கி.மு.6 00-ம் வருடங்களில் உருவாக்கப்பட்டது என்பது சிலருடைய கருத்து. சமீபத்தில் யூப்ரிடிஸ் நதியருகே 75 அடி அகல சுவரை கண்டு பிடித்திருக்கிறார்கள். இது தொங்கும் தோட்டமாக இருக்கலாம் என்று சிலர் நம்பிக்கையாக தெரிவிக்கிறார்கள்.

உலகில் உள்ள மலைகளிலேயே மிகவும் பணக்கார மலை எதுவென்றால் அது ஆல்ப்ஸ் மலைதான். காரணம் ஹிட்லர் இரண்டாம் உலகப்போரின்போது எதிரிகளுக்கு பயந்து, தான் வைத்திருந்த பிளாட்டினம், தங்கம், வெள்ளி முதலியவற்றை அள்ளி ஆல்ப்ஸ் மலையில் ஒளித்து வைத்திருப்பதாக நம்பி மலையெங்கும் அலைந்து திரிந்தது அமெரிக்கப்படை.

கடைசியாக ௧௯௪௫ல் ஒரு புதையலை கண்டுபிடித்தது. அதுவே பல ஆயிரம் கோடி ரூபாய் பெறுமானம் கொண்டது. அன்றிலிருந்து மக்கள் கூட்டம் எப்போதும் ஆல்ப்ஸ் மலையில் புதையல் தேடி அலைந்து கொண்டே இருக்கிறது.

இயேசுகிறிஸ்து இறுதியாக திராட்சை ரசம் குடித்த கோப்பை ஒன்று ஐஸ்லாந்தில் இருப்பதாக கூறுகிறார்கள். திஹோலி கிரெயில் என்று அழைக்கப்படும் இந்த கோப்பை பூமிக்கு அடியில் 15 அடி ஆழத்தில் ஒரு ரகசிய அறையில் இருப்பதாக கதைகள் உலவுகின்றன.

கோப்பை இருக்கிறதா? இல்லையா? என்று மக்கள் கூட்டம் ஐஸ்லாந்து பகுதியில் பூமியை தோண்டிக்கொண்டே இருக்கிறது. இப்படி விடை கிடைக்காத ரகசியங்கள், அதிசயங்கள் பூமியில் நிறைய இருக்கின்றன.

உலக அளவில் சென்டிமென்ட்


நம் நாடு மட்டுமல்ல உலகில் பல நாடுகளிலும் ஏகப்பட்ட சென்டிமென்டும் நம்பிக்கைகளும் இருக்கின்றன.

நம் நாட்டில் எல்லாமே வலது மயம்தான். எதை கொடுப்பதாக இருந்தாலும் வலது கையால்தான் கொடுக்க வேண்டும். முதல் அடியை வலது காலால்தான் எடுத்து வைக்க வேண்டும் என்கிறார்கள்.

ரோமானியர்களுக்கும் இந்த சென்டிமென்ட் உண்டு. எப்போது வீட்டுக்குள் நுழைவதாக இருந்தாலும் வலது காலை முதலில் எடுத்து வைத்துத்தான் நுழைவார்கள்.

இங்கிலாந்து நாட்டில் இன்னும் ஒரு படி மேலே போய் செருப்பு போடும்போதுகூட முதலில் வலது காலைத்தான் உள்ளே நுழைப்பார்கள். இப்படி செய்வதால் ஆயுள் அதிகரிக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.


வீட்டுக்குள் செருப்பு போட்டு நடப்பது நம்மூரில் புனிதமில்லாத விஷயம். அதோடு சுத்தத்துக்கும் எதிரி. இதனால் நம்மவர்கள் யாரும் வீட்டுக்குள் செருப்பு போடுவதில்லை. இந்த சென்டிமென்ட் தாய்லாந்திலும் உண்டு. அங்கு செருப்புக் காலுடன் வீட்டுக்குள் நுழைந்தால் அந்த வீட்டில் இருப்பவர்களை அவமானப்படுத்துவதாக அர்த்தம். அவர்களுக்கு வரவேற்பும் இருக்காது.


நாம் எப்படி மற்றவர்களுக்கு பொருளை கொடுப்பதாக இருந்தால் வலது கையால் கொடுக்கிறோமோ அதேபோல் தாய்லாந்திலும் வலது கை சென்டிமென்ட் உண்டு. அங்கே வலது உள்ளங்கையில் பொருளை வைத்து நீட்ட வேண்டும். அப்போது இடது கை, வலது கையின் மணிக்கட்டைப் பிடித்து இருக்க வேண்டும். அப்படி கொடுத்தால்தான் கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் பலன் உண்டாம்.


உள்ளங்கை அரித்தால் வருமானம் என்ற சென்டிமென்ட் வெளிநாடுகளிலும் உள்ளது. துருக்கியில் இடது உள்ளங்கை அரித்தால் பணம் வரும். வலது உள்ளங்கை அரித்தால் உள்ள பணமும் போய்விடும் என்பது நம்பிக்கை.


பூனை குறுக்கே போனால் போன காரியம் உருப்படாது என்கிற சென்டிமென்ட் அமெரிக்காவிலும் உண்டு. அதிலும் கறுப்பு பூனை என்றால் கேட்கவே வேண்டாம். உடனே வீட்டுக்குத் திரும்பிப் போய் சோபாவில் படுத்துக் கொள்வார்கள். ஏனென்றால் அங்கு கறுப்பு பூனை சாத்தானின் குறியீடு.


தரையில் படுத்திருப்பவர்களை தாண்டிப் போகக்கூடாது என்பது நமது பழக்கம். இது அமெரிக்காவிலும் கடைபிடிக்கப்படுகிறது. அதிலும் குழந்தைகள் என்றால் எக்காரணத்தைக் கொண்டும் தாண்டக்கூடாது.


நாம் இரவில் நகம் வெட்ட மாட்டோம். கொரிய நாட்டினரும் அப்படித்தான். நகம் உடலின் ஒரு பாகம், அதை இரவில் வெட்டினால் எலிகள் தின்றுவிடுமாம், அதனால் நமது ஆன்மாவின் அளவு குறைந்துவிடும் என்பது அவர்களது நம்பிக்கை.


பல்லி கத்துவது நல்லது நடக்கும் என்பதற்கான அறிகுறி என்று சொல்கிறார்கள். இந்தோனேஷியாவில் கெய்கோ என்ற சிறுபல்லி சத்தம் கேட்டால் மக்கள் சந்தோஷப்படுவர். நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை கொள்வார்கள். பிரசவ வலி ஏற்படும்போது இந்த பல்லி கத்தினால் சுகப்பிரசவமாக இருக்கும் என்பது ஐதீகம்.

இப்படி ஒவ்வொரு நாட்டிலும் நம்மைப்போல செட்டிமென்ட் உண்டு.