குழந்தைகளுக்கான கார்ட்டூன் படங்களை வரைந்து புகழ் பெற்றவர் வால்ட் டிஸ்னி. இவரை அமெரிக்க ராணுவம் கார்ட்டூன் வரைய சொல்லிக் கேட்டது. 1942-ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்தபோது அமெரிக்க கடற்படை தளபதி ஈ.எஸ்.கால்டுவெல் மஸ்கிடோ போர்ஸ் என்ற புதிய படைப்பிரிவை உருவாக்கினார். அதற்கு ஒரு சின்னம் தேவை என்று நினைத்தபோது அவரது நினைவுக்கு வந்தவர் வால்ட் டிஸ்னிதான்.
உடனே கடற்படை தளபதி டிஸ்னிக்கு ஒரு கடிதம் எழுதினார். தளபதியின் கோரிக்கையை தட்ட முடியுமா? ஒரு குண்டின் மேல் நீரை கிழித்து செல்லும் கொசு படத்தை வரைந்து அனுப்பினார். அந்த படத்தை ஒவ்வொரு படகிலும் வரைய செய்தார் கடற்படை தளபதி. படத்தை பார்த்த கடற்படை வீரர்கள் உற்சாகமாக போருக்கு கிளம்பினார்கள்.
இந்த உற்சாகம் அமெரிக்க ராணுவத்தின் ஒவ்வொரு பிரிவுக்கும் வேண்டுமென்று அந்தந்த பிரிவின் தளபதிகள் விருப்பப்பட, ஒவ்வொரு பிரிவிலும் இருந்து டிஸ்னிக்கு கடிதம் போனது. தனியொரு ஆளாக இதை எப்படி செய்வது என்று எண்ணிய டிஸ்னி ஐந்து பேரை வேலைக்கு அமர்த்தினார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்ட்டூன் சின்னங்களை வரைந்தார்.
இதற்காக டிஸ்னி ஒரு பைசா கூட சம்பளமாக வாங்கவில்லை. அமெரிக்க படைகளின் சின்னங்களை பார்த்து விட்டு அவர்களோடு சேர்ந்து போரிட்ட பிரிட்டன், போலந்து, நியூசிலாந்து நாட்டு ராணுவமும் அவர்கள் படைகளுக்கும் படம் வேண்டி டிஸ்னிக்கு கடிதம் எழுதினார்கள்.
ராணுவத்தில் சேரச்சொல்லி மக்களை அழைப்பதற்கு ஒரு படம், ராணுவத்தின் பெருமையை சொல்வதற்கு ஒரு படம், மருத்துவம் பார்க்க வரச்சொல்லி டாக்டர்களுக்கு ஒரு படம் என்று விதவிதமாக தினுசு தினுசாக வரைந்து தள்ளியது டிஸ்னி குரூப்.
இது தவிர எதிரிகளை கிண்டலடித்து நிறைய கார்ட்டூன்களை போர்க்கருவிகளில் வரைந்து அனுப்பினார்கள். ஒரு கார்ட்டூனில் சாத்தானுக்கு அருகே 1, 2, 3 என்ற எண்களின் கீழ் ஹிட்லர், டோஜோ, இல் டியூஸ் ஆகிய மூவரின் பெயரும் இருக்கும். அவர்களை எண்ணை சட்டியில் போடவா, உயிரோடு வேகவைக்கவா? என்று சாத்தான் கேள்வி கேட்பதை போன்று இருக்கும் படத்தை பார்த்து குஷியான அமெரிக்க வீரர்கள், ஜெர்மனி மீது படம் வரைந்த குண்டுகளையே போட்டார்கள்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த ஹிட்லரின் நாஜிப்படையை சேர்ந்த ஒருவர் ஜெர்மனி விமானத்தில் அமெரிக்கா போல விமானத்தின் மீது மிக்கி மவுஸ் கார்ட்டூனை வரைந்து அமெரிக்க விமானம் போல மாற்றினார். தங்களது விமானம்தான் வருகிறது என்று கார்ட்டூனை பார்த்து அசால்டாக இருந்த அமெரிக்க படைகளின் மீது கொத்துக்கொத்தாக குண்டுகளை போட்டனர். பெருத்த சேதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட டிஸ்னி முதன்முறையாக ராணுவத்துக்காக கார்ட்டூன் வரைந்ததற்கு வருத்தப்பட்டார். அதன்பின் ராணுவத்துக்காக கார்ட்டூன் வரைவதில்லை என்ற முடிவை எடுத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக