தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் காயாமொழி கிராமம் அமைந்துள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற காரையடி சுடலைமாடன் கோவில் அமைந்துள்ளது.
குழந்தைப்பேறு
இந்தக்கோவிலில் சுடலைமாடன், முண்டன்சாமி, பிரம்ம சக்தி, பேச்சியம்மன், குளிக்கரை பேச்சியம்மன், இசக்கியம்மன், செங்கடசாமி, கட்டேரி பெருமாள், வைணப்பெருமாள், ஐயம்பந்தி, சிவனந்த பெருமாள் உள்ளிட்ட தெய்வங்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். இந்த கோவிலின் தலவிருட்சம் காரை மரமாகும்.
மூலவரான காரையடி சுடலைமாடன், கட்டேரி பெருமாள் உள்ளிட்ட தெய்வங்களை மனமுருகி வழிபட்டால் தீராத வினைகள் தீருவதுடன், குழந்தைப்பேறு கட்டாயம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். மேலும் செய்வினை கோளாறு, பேய், பிசாசு தொல்லைகள் நீங்குவதுடன், தொழில்வளமும் பெறுகும்.
தல வரலாறு
பார்வதி தேவி சிவனிடம் “தனக்கு ஆண்பிள்ளை வரம் வேண்டும்” என்று கேட்கிறார். சிவன் கைலாயத்தில் உள்ள 32-வது தூணில் எரிகின்ற மணிவிளக்குகளில் முந்தானையை ஏந்தி நிற்குமாறு கூறுகிறார். அவ்வாறே பார்வதியும் விளக்கின் கீழ் முந்தானை ஏந்தி நிற்க, பரம சிவன் அந்த விளக்கின் சுடரை தூண்டிவிட முந்தானையில் அந்தச் சுடர் தெறித்து விழுகிறது. அந்த சுடர் வெறும் முண்டமாக இருப்பதைக் கண்ட பார்வதி பயந்து தன் கணவரிடம் கூறுகிறார். சிவன் அந்த முண்டத்தினைத் தலையுள்ள குழந்தையாக உருவாக்குகிறார்.
அந்தக் குழந்தையை அன்போடு வளர்த்து வருகின்றனர். ஆனால் அந்தக் குழந்தை இரவில் சுடலைக்கு (சுடுகாடு)சென்று பிணங்களைத் தின்கிறது. அதைக் கண்ட பார்வதியும் சிவனும், அந்தக் குழந்தையை பூமிக்கு அனுப்பி விடுகின்றனர். குழந்தை சுடலையிலேயே தங்கி பிணங்களை தின்று வளர்கிறது. இதனால் அந்த குழந்தைக்கு சுடலைமாடன் என பெயர் வந்தது. பின்னர் சுடலைமாடன் பல வழிகளைக் கடந்து கன்னியாகுமரி வந்தடைகிறார்.
மயான வேட்டை
அங்கு இருக்கும் பகவதியிடம் தன் நிலையை விளக்கத் தனது காவலுக்கு அவரை வைத்துக்கொள்கிறார் பகவதி. மேலும் அவளது கோவிலின் ஈசான மூலையில் உள்ள ஏழு கடாரம் தங்கத்தைக் காவல் காக்கும் பொறுப்பையும் சுடலைமாடனிடம் ஒப்படைத்தார். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மயான வேட்டைக்குச் செல்வதும், அன்னையின் புதையலுக்குக் காவல் இருப்பதுமாகத் தனது நாட்களைக்கழித்து வந்தார் சுடலைமாடன்.
மலையாள தேசத்திலே நந்தம்புனலூர் என்ற ஊர் இருந்தது. அங்கு காளிப் பெரும்புலையன் என்ற மந்திரவாதி வாழ்ந்து வந்தான். அவனது மனைவி புலக்கொடியாள். இவர்களுடைய மகள் மாவிசக்கி மிகுந்த அழகுடன் விளங்கினாள்.
தங்கப் புதையல்
தன்னுடைய 12-ம் வயதில் மாவிசக்கி பருவமெய்தினாள். தன்னிடமுள்ள ஆபரணங்களால் மகளை அலங்கரித்து மகிழ்ந்தான் காளிப் பெரும்புலையன். இன்னமும் தன் மகளுக்குப் பொன்னால் நகைகள் செய்து போட்டு அழகு பார்க்கவேண்டும் என்ற ஆசை அவன் மனத்தில் உதித்தது. இதனைதொடர்ந்து அஞ்சனமை போட்டு தங்கப் புதையல் எங்கே கிடைக்கும் என்று அவன் பார்க்கும் போது கொட்டாரக்கரை பகவதியின் ஆலயத்தில் ஏழு கடாரம் பொன் புதையலாக இருப்பதை அறிந்தான்.
எனவே அதனைக் கொள்ளையிட வேண்டும் என்று முடிவு செய்ததான். மாயாண்டி சுடலைமாடன் காவல் இருப்பதைக் கண்டு அஞ்சி, இவன் இருக்கும் போது நம்மால் கொள்ளை செய்ய இயலாது என்று எண்ணிக் காத்திருந்தான்.
வெள்ளிக்கிழமை இரவில் சுடலை மாடன் மயான வேட்டைக்குக் கிளம்பினார். அவர் கிளம்பியதும், காளிப்புலையன் உள்ளே சென்று ஒருகடாரம் பொன்னை கொள்ளையடித்து சென்றான்.
சிமிலில் அடைத்து விடுவான்
மயான வேட்டைக்குச் சென்ற சுடலை ஈசன் திரும்பி வந்தார். தன் காவலில் இருந்த ஏழுகடாரம் தங்கத்தில் ஒரு கடாரம் குறைந்ததைக் கண்டதும் கோபமுற்றார். யார் இந்த பாதகத்தைச் செய்தார்கள் என்று எண்ணியவாறே அன்னை பகவதியாளிடம் சென்றார். "அம்மா... நான் மயான வேட்டைக்குச் சென்றிருக்கும்போது யாரோ உன் கோவிலில் வந்து கொள்ளையிட்டுச் சென்றிருக்கின்றார்கள். யாரது?" என்று கேட்டார்.
அன்னை பகவதியும் மகனே.. நந்தம்புனலூரிலுள்ள காளிப்பெரும்புலையன்தான் இதனை செய்தது.
"பொன் போனால் போகிறது.. என் மகனே நீ என்னை விட்டுப் போகவேண்டாம். அவன் உன்னைப்பிடித்து சிமிலில் அடைத்து விடுவான்" என்றாள் அன்னை பகவதி..
"அம்மையே.. உனக்கு என்னைப் பற்றித் தெரியாதா? தில்லைவன மயானத்தில் பிறந்த என்னை எந்த மாயசக்தியாலும் எதுவும் செய்ய முடியாது... நீ ஒருவார்த்தை மட்டும் சொல். என் காவலிலிருந்த பொன்னைக் கொள்ளை செய்தவன் குடும்பத்தை அழித்து மண்ணோடு மண்ணாக்கி விட்டு வருகிறேன்.." என்று முழங்கினார் சுடலை.. இனியும் தன் மகனைக் கட்டுப்படுத்த இயலாது என்றறிந்த அன்னை பகவதியும் அவனுக்குத் திருநீற்றைப் பூசி வல்லயத்தைக் கையில் கொடுத்து அனுப்பி வைத்தாள்.
பாம்பாட்டி
பாம்பாட்டியாக உருவம் கொண்டார்.. கானகத்தில் தான் பிடித்த பாம்புகளைக்கொண்டு நந்தம்புனலூர் வந்தடைந்தார். பாம்புகளைத் தெருவில் விட்டு வித்தை காட்டிக் கொண்டிருந்தார். காளிப்புலையன் வீட்டிலிருந்து யாரும் வந்து பார்க்கவில்லை.. ஆனால் காளிப்புலையனின் மகள் மாவிசக்கி தன் வீட்டின் மாடியில் நின்று இதைக் கவனித்துக் கொண்டிருந்தாள். அவளைக் கண்டார் சுடலை.. இவளுக்காகத்தானே அந்தத் திரவியத்தைக் களவெடுத்தான் பெரும்புலையன். எனவே முதலில் இவளைப்பழிவாங்க வேண்டும் என்று எண்ணி வயதான பண்டார உருவெடுத்து காளிப்புலையன் வீட்டுக்கு வந்து கையேந்தி பிச்சை கேட்டார். பின்னர் மாஇசக்கியைக் கற்பழிக்கப் போவதாக சபதம் ஏற்ற சுடலைமாடன் அன்றிரவு பல்லியின் வடிவில் அவளைக் கற்பழிக்கிறார். அதைத் தன் தந்தையிடம் முறையிடுகிறாள் மாவிசக்கி. அவள் தந்தை காளிப்புலையன் மை போட்டுப் பார்க்கிறான். ஆனால், அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
கொடை விழா
இந்த நிலையில் காக்காச்சி மலையில் நான்கு பளியர்கள் பயிரிட்டு வருகின்றனர். புழுவாக வடிவம் கொண்டு சுடலை, அப் பயிர்களை அழிக்கிறான். காளிப்புலையன் மீண்டும் மை போட்டுப் பார்க்கிறான். இதற்கெல்லாம் காரணம் சுடலைமாடன்தான் என்பதை அறிகிறான். மாடன் கோபம் கொண்டதாலேயே இப்படியான அழிவுச் செயல்களைச் செய்கிறான் என்று உணர்ந்து மாடனுக்குக் கொடைவிழா எடுக்க முன் வருகிறான். அப்போது எனக்கு உன்னால் கொடை கொடுக்க இயலுமா?" என்று கேட்டார் சுடலைமாடன்.
"என்ன வேண்டுமானாலும் தருகிறேன்.." என்றான் புலையன்.
"ஏழு பரண்கள் போட்டு எட்டாத உயரத்தில், ஏணிவைத்து மாலைசாற்றி, கும்பம் வைத்து, ஒருபரணில் சூல் ஆடுகளும், ஒரு பரணில் சூல் பன்றிகளும், ஒரு பரணில் சூல் எருமைகளும், ஒரு பரணில் கருங்கிடாக்களும், ஒரு பரணில் செங்கிடாக்களும், ஒரு பரணில் ஒரு கோட்டை புழுங்கலரிசி சோற்றை ஒரே படைப்பாகவும் போட வேண்டும்"
"அப்படியே செய்கிறேன்.. என்னை விட்டு விடு. "
"அது மட்டுமல்ல... ஏழாவது பரணிலே ஒரு நிறைமாத கர்ப்பிணிப்பெண்ணை எனக்குப்பலி கொடுக்க வேண்டும். அவளும் தன் தகப்பனுக்கு ஒரே பெண்ணாக இருக்க வேண்டும். அவளுக்கு அது முதல் குழந்தையாக இருக்க வேண்டும்" என்றார். மேலும் "அப்படி நீ எனக்குப் பலி கொடுத்தால், மூன்றே முக்கால் நாழிகைக்கு உன் சிமிழுக்குள் நான் அடைபடுவேன்" என்று வாக்கும் கொடுத்தார்.
நிறைமாத கர்ப்பிணி
இதில் மயங்கிய பெரும்புலையன் பலி கொடுப்பதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தான். பரண்கள் அமைத்தான்.. ஆடுகளும், பன்றிகளும், எருமைகளும், கிடாக்களும் கிடைத்தன... நிறைமாத கர்ப்பிணிக்கு எங்கு செல்வது என்று யோசனை செய்த போது மாவிசக்கியின் நினைவு வந்தது... தனக்கு மகளை விட மாந்திரீகமே முக்கியம் என்று எண்ணி அவளையே பலியிடத் தீர்மானித்தான் பெரும்புலையன். வீட்டுக்கு வந்தான். மகளை அழைத்தான்.
"மகளே மாவிசக்கி.. நம் குலதெய்வத்துக்குப் பலி கொடுக்கப் போகிறேன்.. நீயும் வா.. நாம் செல்லலாம்" என்று அழைத்தான். "அப்பா.. நானோ நிறைமாத கர்ப்பிணி.. பலி கொடுப்பதையெல்லாம் நான் காணக் கூடாதல்லவா? நான் வரவில்லை" என்று மறுத்தாள். அவளை சமாதானம் செய்து அழைத்துச் சென்றான். ஏழாவது பரணிலே அவளை ஏற்றி அவளது கைகளையும், கால்களையும் கட்டினான்.
மாவிசக்கியும் புரிந்து கொண்டாள். "அடேய் சண்டாளா.. பெற்ற மகளென்றும் பாராமல், என்னையும் கொலைசெய்து பலியிடத் துணிந்து விட்டாயே.. நீ உருப்படுவியா.... நான் மரித்து ஏழு நாட்களுக்குள் நீயும் செத்துப் போவாய்" என்று சாபமிட்டு அழுதாள்..
சிமிழில் அடைப்பு
அதையெல்லாம் காதில் வாங்க வில்லை காளிப்புலையன். அத்தனை ஆடுகளையும், எருமைகளையும், பன்றிகளையும், கிடாக்களையும் பலி கொடுத்தான்.. ஏற்றுக் கொண்டார் சுடலைமாட சுவாமி.. ஒரு கோட்டை புழுங்கலரிசி சோற்றையும் ஏற்றார். இறுதியாகத் தனது மகளையும் நெஞ்சைக்கிழித்துப் பலி கொடுத்தான். அதையும் ஏற்றார். பின்னர் தான் சொன்னது போல் அவனது சிமிழுக்குள் அடைபட்டார்... சுடலைமாடனை அடைத்து விட்டோம். இனி பகவதி கோவிலில் உள்ள அனைத்துத் தங்கங்களையும் கொண்டு வந்து விடலாம் என்று எண்ணிய புலையன், சுடலைமாடனை அடைத்த சிமிழை அங்குள்ள குளத்தில் புதைத்து வைத்தான்.
குளத்திலிருந்து சுடலைமாடனால் மீள முடியாது என்று நம்பி தனது வீட்டுக்கு வந்தான்.. புலக்கொடியாள் தண்ணீர் எடுக்கக் குளத்துக்குச் சென்றாள். குடத்தில் நீரை மொண்டாள்.. அந்த நீரில் சிமிழும் வந்து விட்டது. வீட்டுக்கு வந்தாள்.. புலையனுக்கு சாப்பாடு வைத்தாள். குடத்திலிருந்த நீரை ஒரு செம்பில் அவனுக்கு ஊற்றி வைத்தாள். நீரருந்த செம்பை எடுத்த புலையன் கண்களில் அந்த சிமில் பட்டது. "ஐயோ... இந்த சிமில் இங்கு வந்து விட்டதே" என்று அவன் பரிதவித்த நொடியில் மூன்றே முக்கால் நாழிகை முடிவடைந்து விட்டது. சிமில் வெடித்தது..
ஆங்கார சொரூபமாக வெளிப்பட்டார் சுடலைமாட சுவாமி.. "அடேய் பெரும்புலையா... ! தங்கத்திற்கு ஆசைப்பட்டு பெற்ற மகளையே பலிகொடுத்த சண்டாளா... உன்னைப் போன்ற பெரும்பாவிகள் உயிரோடு இருக்கலாமா? என் அன்னையின் ஆலயம் புகுந்து திருடிய உன்னைக் குடும்பத்தோடு அழிப்பேன் என்று சபதம் செய்தேன்.. இப்போது நிறைவேற்றுகிறேன்." என்று சொல்லி அவனை அடித்தார்... மேலும் அருகே நின்றிருந்த புலக்கொடியாளையும் அடித்தார்.. இதில் அவர்கள் 2 பேரும் இறந்தனர்.
தன் அன்னையின் கோவிலில் இருந்து புலையன் கொள்ளையடித்துச் சென்ற பொன்னை மீட்டு கொட்டாரக்கரை திரும்பினார். அவற்றை மீண்டும் அன்னையிடமே சேர்ப்பித்தார் சுடலைமாடன்.
திருவிழா
காரையடி சுடலைமாட சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி முதல் செவ்வாய்க்கிழமை அன்று திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவைக் காண சென்னை, கோவை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
விழாவையொட்டி ரைஸ் மில் அருகே உள்ள பலவேசம் முத்து சாமிக்கு திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடத்தப்படும்.
செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் பலவேசம் முத்துகோவிலில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் மேள தாளங்களுடன் செல்வார்கள். பின்னர் அங்குள்ள குளம் மற்றும் கிணற்றில் குளித்துவிட்டு அருஞ்சுனை காத்த அய்யனார் மற்றும் பிற தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபடுவார்கள்.
அதன்பின்னர் பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து கொண்டு ஊர்வலமாக செல்வார்கள். நண்பகல் 12 மணியளவில் பலவேசம் முத்து கோவிலில் சிறப்பு பூஜை நடைபெறும். அதன் பிறகு சுவாமிக்கு படைக்கப்பட்ட படக்கஞ்சி, பானகாரம் ஆகியவை பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படும்.
கணியான் கூத்து
பலவேச முத்து கோவிலில் இரவு 9 மணியளவில் திருவிளக்கு பூஜை நடைபெறும். அதன்பிறகு முளைப்பாரியை சுற்றி பெண்கள் கும்மி அடித்து பாட்டுப்பாடுவார்கள். அதனைத் தொடர்ந்துமேளதாளத்துடன் சுடலைமாட சுவாமி கோவிலுக்கு முளைப்பாரி ஊர்வலமாக கொண்டு செல்லப்படும். பின்னர் அங்குள்ள பேச்சி அம்மன் முன்பு முளைப்பாரி வைக்கப்படும். முன்னதாக சுவாமி வரலாற்றைக் கூறும் விதமாக கணியான் கூத்து நடைபெறும். இதனை திரளான பக்தர்கள் கண்டு ரசிப்பார்கள்.
சுடலைமாடன், முண்டன் சாமி, கட்டேரி பெருமாள், பேச்சியம்மன், பிரம்மசக்தி, இசக்கியம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு ஆளுயர மாலைகளும், எலுமிச்சை மாலை, வாழைத்தார், தேங்காய், பழம், பனியாரம் ஆகியவை படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும்.
அருள்வாக்கு
அதனைத்தொடர்ந்து நள்ளிரவு 12 மணியளவில் ஐயம்பந்தி, செங்கடசாமி, சிவனந்த பெருமாள், வயணப்பெருமாள் ஆகியோருக்கு சிறப்பு பூஜை நடைபெறும். அதன்பிறகு பேச்சியம்மன் உள்ளிட்ட பெண் தெய்வங்களுக்கு செங்கிடா, பன்றி, கோழி ஆகியவை பலியிடப்படும். அதன் பின்னர் சுடலைமாடன், முண்டன் சாமி, கட்டேரி பெருமாள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு தலை வாழை இலையில் ஆடு, பன்றி ஆகியவை பலியிடப்படும். அதன் பிறகு சுவாமி வேட்டைக்கு செல்வார். அப்போது வாணவேடிக்கை நடைபெறும். இது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இதையடுத்து பக்தர்களுக்கு சுவாமி அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியின் அருளை பெற்று செல்வார்கள்.
------------------------------
--
நீதிமன்றத்தில் சாட்சி சொன்ன ஐகோர்ட்டு மகாராஜா
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தில் வசித்து வந்த செல்லையா சுடலைமாடனின் தீவீர பக்தன். தனக்கென்று ஒரு வீடும், சிறிய அளவில் நிலமும் வைத்திருந்தார். நிலத்தின் வரப்பு பிரச்சினையில் 3 பேரிடையே தகராறு இருந்து வந்தது. அதில் இவரது 3-ம் சொக்காரன் என்ற உறவில் தம்பி முறை வரும் ஆண்டி என்பவருக்கும், பக்கத்து நிலத்துக்காரர் சின்னத்துரை என்பவருக்கும் தகராறு ஏற்படுகிறது.
இதில் ஆத்திரம் அடைந்த சின்னத்துரை, ஆண்டியை கத்தியால் குத்திவிட்டு தப்பி செல்கிறார். அந்த நேரம் வயலுக்கு வந்த செல்லையா உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆண்டியை காப்பாற்ற முயன்றார். இருப்பினும் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதனைதொடர்ந்து செல்லையாவை போலீசார் கைது செய்தனர்.
கொலை வழக்கு நெல்லையிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. அந்த காலத்தில் தாலுகா கோர்ட்டு, ஜில்லா கோர்ட்டு என்று அழைத்து வந்தனர். ஜில்லா கோர்ட்டை உயர்ந்த கோர்ட்டாக கருதி, அதை பேச்சு வழக்கில் ஐகோர்ட்டு என்பர். முதல் நாள் வழக்கு விசாரணையின் போது நீதிபதியின் கேள்விக்கு பதிலளித்த செல்லையா, ‘‘ஐயா, நான் பழி, பாவங்களுக்கு அஞ்சுபவன். என்னை தாயாய், தந்தையாய் காப்பவரான அந்த சுடலைமாடன் நிலை கொண்டிருக்கும் கோவிலின் நேர் கிழக்கு பக்கம்தான் இந்தச் சம்பவம் நடந்தது. அதனால் அவருக்குத்தான் எல்லாம் தெரியும்’’ என்றார். உடனே நீதிபதி, அப்படி என்றால் அவர் வந்து சாட்சி சொல்வாரா? என்று கேட்க, நீதிமன்ற அவையில் இருந்த அனைவரும் சத்தமாக சிரித்தனர். நாளை மறுநாள் விசாரணை நடத்தப்படும். என்று கூறி, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார் நீதிபதி.
இதனிடையே வயலுக்கு நீர் பாய்ச்ச சென்ற சின்னத்துரை, நாகம் தீண்டி, ஆண்டி இறந்த இடத்திலேயே இறந்து விடுகிறான். வழக்கு விசாரணைக்கு முந்தைய நாள் இரவில் நீதிபதியின் கனவில் ‘‘மேல் சட்டை இல்லாமல் தலையில் தலைப்பாகை கட்டியவாறு வெள்ளை வேட்டியுடன் வந்த ஒருவர், ஆண்டியை கத்தியால் குத்தி சின்னத்துரை கொன்றதாகவும், செல்லையா குற்றம் செய்யாதவர்’’ என்பதையும் கூறினார். மறுநாள் காலை விடிந்தது. இரவில் ஒரு விசாரணை தொடர்பான கனவை கண்டதில் வியப்பும், குழப்பமும், நம்ப முடியாத நிலையும் கொண்டு, அன்றைய தினம் நீதிமன்றம் வந்தார், நீதிபதி.
விசாரணை தொடங்கியது. அப்போது கோர்ட்டு வளாகத்திலிருந்து விரைந்து வந்த காவலர்கள், ஐயா, ஆண்டி கொலை வழக்கு தொடர்பாக, சாட்சி சொல்ல ஒரு ஆள் வந்திருக்கிறார் என்றதும், வரச் சொல்லுங்கள் என்றார் நீதிபதி. வெள்ளைக்குதிரையை விட்டு வந்திறங்கிய வாட்ட சாட்டமான தேகம் கொண்ட அந்த நபர் முறுக்கு மீசையுடனும், மேல்சட்டை அணியாமல், வெள்ளை வேட்டியுடன் கையில் வேல் கம்புடனும் வந்து நின்றார். சற்று திகைப்புடன் பார்த்தார் நீதிபதி. ஆம், இரவு கனவில் வந்த அதே நபர். ‘‘ம்.. என்ன, சொல்லப் போகிறீர்கள்’’ என்றார்..
தலையில் கட்டியிருந்த தலைப்பாகையை எடுத்து தனது இடது கைப்பக்கவாட்டில் வைத்துக்கொண்டு வணக்கம் செலுத்தி விட்டு, ‘‘ஐயா, நான் செந்தூரிலுள்ள சண்முகநாதன் பண்ணை வீட்டு காவலாளி மகாராசன், சம்பவம் அன்று ஆறுமுகமங்கலம் வழியாக வந்தபோது கொலை சம்பவத்தை கண்டேன் என்றும் செல்லையா குற்றவாளி அல்ல அவன் நிரபராதி என்றும், குற்றவாளி சின்னத்துரை நாகம் தீண்டி இறந்ததாகவும்’’ கூறினார்.
நீதிபதி திகைத்தபடியே கேட்டார். பின்னர் நீங்கள் போகலாம் என்ற கூற, மாயமானார் மாயாண்டி. அவர் நின்ற கூண்டில் ரத்தம் வடிந்திருந்தது. கோர்ட்டு காவலாளிகள் தண்ணீர் விட, அது பாலாக மாறியது. சற்று நேரத்தில் எந்த தடயமும் இல்லாமல் ஆனது. ஆனால் அந்த பகுதியில் பிச்சிப்பூ (ஜாதி மல்லி) மணம் கமழ்ந்தது. கோர்ட்டில் அனைவரும் திகைத்தனர். நீதிபதி செல்லையாவை அழைத்து ‘‘உன் சாமி பேரென்ன சொன்ன’’ செல்லையா, ‘சுடலை மாடன்’’ ‘‘ம்..ம்.. யுவர் கார்டு ஸ் கிரேட்’’ என்று கூறி, செல்லையாவை விடுதலை செய்து உத்தரவிட்டார் நீதிபதி.
ஐகோர்ட்டில் சாட்சி சொல்லி, தன்னை நம்பிய பக்தனை காப்பாற்றியதால் அன்று முதல் ஆறுமுகமங்கலத்து சுடலைமாடன் ஐகோர்ட்டு மகாராசா என்றழைக்கப்பட்டார்.