புதன், 23 பிப்ரவரி, 2011

கட்டுக்கடங்காத காட்டுத் தீ


உலகமெங்கும் உள்ள மொத்த காடுகளின் வில்லன் யார் தெரியுமா? காட்டுத்தீ தான். மின்னல், எரிமலை, பாறைச்சரிவால் ஏற்படும் உராய்வுகள், சிறு தீப்பொறிகள் இவைகள் காட்டுத்தீ உருவாக முக்கிய காரணங்களாக இருந்தன.

ஆனால் இப்போது மக்கிய குப்பைகளின் வாயுக்களும் அணைக்கப்படாத சிகரெட் துண்டுகளும் காட்டுத்தீக்கு வழிவகுக்கின்றன.


கிட்டத்தட்ட 42 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்தே காட்டுத்தீ, காடுகளை அழித்து வந்திருக்கிறது. எதிரிகளின் ஊடுருவலை தடுக்க அந்த காலத்தில் ராணுவத்தினர் காட்டுக்கு தீ வைப்பதை பழக்கமாக கொண்டு இருந்திருக்கின்றனர்.

மரங்கள் இருக்கும் இடங்களில் இயற்கையாகவே அதிக அளவில் சுத்தமான ஆக்ஸிஜன் இருக்கும். அதுவே தீ கொளுந்து விட்டு எரியவும் காரணமாகி விடுகிறது. காடு தீப்பற்றிக்கொண்டு எரிய தொடங்கியதுமே அந்த பகுதியில் வீசும் காற்றின் வெப்பம் 800 டிகிரி செல்சியஸ் வரை கூடும்.

வெப்பமான இடங்களில் இருக்கும் மரங்களின் நீர் ஆவியாகிவிடுவதால், மரங்கள் எல்லாம் ஈரப்பதம் இல்லாமல், காய்ந்த விறகுக்கட்டைகள் போல் மாறி விடும்.
காட்டுத்தீயின் வேகம் மணிக்கு 10 கிலோ மீட்டர் என்ற அளவில் இருக்கும். அதுவே புல்வெளி என்றால் 22 கிலோ மீட்டர் வேகத்தில் பரவும். புயல், பெரும் காற்று வீசும் சமயங்களில் கேட்கவே வேண்டாம்.

காட்டுத்தீயை கட்டுப்படுத்த அது பரவும் திசைக்கு எதிர்திசையில் தீ வைப்பதுதான் தீர்வு. காட்டுத்தீ பரவும் திசைக்கு எதிர்திசையில் தீ வைத்துவிட்டால் அந்த இடத்தில் இருக்கும் மரம், மட்டைகள் கருகி தீய்ந்து விடும்.


காற்றின் போக்குக்கு வேகமாக பரவி சீறிவரும் காட்டுத்தீ, அந்த இடத்திற்கு பற்றி பரவ மரங்கள் மிச்சம் எதுவும் இருக்காது. இதனால் காட்டுத்தீயின் வேகம் கலைந்து அது அணைந்து விடும்.

ஆனால் காற்றின் திசைக்கு ஏற்ப காட்டுத்தீ திசை மாறிக்கொண்டே இருக்கும் என்பதால் அது எந்த திசைகளில் எல்லாம் பரவும் என்பதையும் எளிதில் கணிக்க முடியாது. சில நாடுகளில் சில்வர் அயோடைட் பொடிகளை ஹெலிகாப்டர் மூலம் தூவி செயற்கை மழையை உருவாக்கி காட்டுத்தீயை கட்டுப்படுத்துவார்கள்.

காட்டுத்தீ சில நாடுகளின் பொருளாதாரத்தையே ஆட்டம் காண வைத்திருக்கின்றது. இது மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தீ பிடித்து எரிவதால் ஏற்படும் கரியமில வாயுக்கள் சுற்றுச்சூழலுக்கும் பெரிய அளவில் தீங்கை ஏற்படுத்துகின்றன.

காட்டுத்தீ தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தால் வெப்ப புயல் உருவாகும். இது உலகின் பருவநிலை மாற்றத்துக்கும் முக்கிய காரணமாக அமைந்து விடும்.
2030-ம் ஆண்டு இறுதிக்குள் அமேசான் காடுகளில் 55 சதவிகித அளவுக்கு காட்டுத்தீயால் அழிந்து போய்விடும் என்று எச்சரிக்கிறார்கள்.

காட்டுத்தீயை கட்டுப்படுத்தவும், புவி வெப்பத்தை தடுக்கவும் அதிகமான மரங்கள் வளர்ப்பதுதான் தீர்வு. எனவே மரங்கள் நடுவோம்! பூமியை காப்போம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக