தங்க ரெயில் என்ற பெயரை கேட்டவுடன் இது முழுவதும் தங்கத்தால் ஆன ரெயிலோ என்று நினைத்து விட வேண்டாம்.
இந்த ரெயில் மற்ற ரெயில்களை போல் உருவாக்கப்பட்டதுதான். இந்த பெயர் வந்ததற்கு வரலாற்றில் சோகமான நிகழ்வு ஒன்று இருந்துள்ளது.
இரண்டாம் உலகப்போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த 1944-ம் ஆண்டு. ஹிட்லர் எதிரிநாடுகள் மீது கடும் தாக்குதல் நடத்திக்கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட யூதர்கள் அனைவரையும் கொன்று குவித்துக்கொண்டிருந்தார்.
அப்போது போர்முனையில் மட்டும் சுமார் 8 லட்சம் யூதர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
எந்த நேரத்தில் கொடூரமான மரணம் தங்களுக்கு ஏற்படுமோ என்று ஒவ்வொரு நிமிடத்தையும் பயத்தோடு அடிவயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு கழித்துக்கொண்டிருந்தனர் யூதர்கள்.
அந்த நேரம் பார்த்து ஹிட்லர் ஒரு அறிவிப்பு செய்தார். அதன்படி யூதர்கள் அனைவரும் தங்களிடம் இருக்கும் பணம், விலை உயர்ந்த பொருட்களையெல்லாம் கொடுத்து விட்டு தப்பித்து ஓடலாம் என்று அறிவித்தார்.
எப்படியாவது உயிர்வாழ்ந்தால்போதும் என்று முடிவு செய்த யூதர்கள், பல வருடங்களாக கஷ்டப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்திருந்த சொத்தையெல்லாம் தந்துவிட்டு பல யூதர்கள் ஓடிப்போனார்கள்.
இப்படி யூதர்களிடம் இருந்து திரட்டப்பட்ட, இல்லை பறிக்கப்பட்ட விலை உயர்ந்த பொருட்களை 42 ரெயில் பெட்டிகளில் ஏற்றிக்கொண்டு வந்தது அந்த ரெயில். இந்த ரெயில்தான் கோல்டன் ரெயில் என்று அழைக்கப்படுகிறது.
இந்த ரெயிலை ஜெர்மனிக்கு கொண்டு வந்தார் ஹிட்லர். இதில் பணம் மட்டுமல்லாமல் தங்கம், வைரம், வெள்ளி போன்ற ஏகப்பட்ட விலைஉயர்ந்த பல பொருட்கள் இருந்தன.
இன்றைக்கு நம் நாட்டில் ஓடும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அதிகபட்சமாக 21 ரெயில் பெட்டிகளை கொண்டதாக இருக்கிறது. இதன் நீளமே 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு இருக்கும்.
ஆனால் இந்த ஹிட்லர் கொண்டு வந்த இந்த ரெயில் எக்ஸ்பிரஸ் ரெயிலைபோல இரண்டு மடங்கு நீளமான ரெயிலாக இருந்தது. இந்த ரெயிலில் அத்தனை பொருட்களையும் ஏற்றிக்கொண்டு வந்தனர்.
இதன் மதிப்பு அந்த காலத்திலேயே 350 மில்லியன் டாலர். நம் பணத்துக்கு 17,500 கோடி மதிப்பு கொண்டது. இந்த ரெயில் ஜெர்மனிக்கு வந்து சேர்ந்த சில மாதங்களிலேயே ஹிட்லர் இறந்து விட்டார்.
அவர் இறந்த சில நாட்களிலேயே இரண்டாம் உலகப்போரும் முடிவுக்கு வந்தது. இந்த விலை மதிக்கமுடியாத, மதிப்பு மிக்க தங்க ரெயிலை நாங்கள் பாதுகாத்துக்கொள்கிறோம் என்று கூறி அமெரிக்கா இந்த ரெயிலை எடுத்துக் கொண்டு போய்விட்டது.
பொருட்களை பறிகொடுத்த யூதர்களின் வாரிசுகள் பல வருடங்களாக போராடி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ஓயாது பிரச்சினைகளை கொடுத்ததால் அமெரிக்க அரசு லேசாக அசைந்து கொடுத்தது.
2007-ம் ஆண்டில் தங்க ரெயிலில் அபகரிக்கப்பட்ட பொருட்களில் சில பொருட்கள் யூதர்களின் வாரிசுகளுக்கு திருப்பித்தரப்பட்டன. ஆனாலும் பெரும்பாலான பொருட்கள் இப்போதும் அமெரிக்கா வசமே உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக