நம் நாடு மட்டுமல்ல உலகில் பல நாடுகளிலும் ஏகப்பட்ட சென்டிமென்டும் நம்பிக்கைகளும் இருக்கின்றன.
நம் நாட்டில் எல்லாமே வலது மயம்தான். எதை கொடுப்பதாக இருந்தாலும் வலது கையால்தான் கொடுக்க வேண்டும். முதல் அடியை வலது காலால்தான் எடுத்து வைக்க வேண்டும் என்கிறார்கள்.
ரோமானியர்களுக்கும் இந்த சென்டிமென்ட் உண்டு. எப்போது வீட்டுக்குள் நுழைவதாக இருந்தாலும் வலது காலை முதலில் எடுத்து வைத்துத்தான் நுழைவார்கள்.
இங்கிலாந்து நாட்டில் இன்னும் ஒரு படி மேலே போய் செருப்பு போடும்போதுகூட முதலில் வலது காலைத்தான் உள்ளே நுழைப்பார்கள். இப்படி செய்வதால் ஆயுள் அதிகரிக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.
வீட்டுக்குள் செருப்பு போட்டு நடப்பது நம்மூரில் புனிதமில்லாத விஷயம். அதோடு சுத்தத்துக்கும் எதிரி. இதனால் நம்மவர்கள் யாரும் வீட்டுக்குள் செருப்பு போடுவதில்லை. இந்த சென்டிமென்ட் தாய்லாந்திலும் உண்டு. அங்கு செருப்புக் காலுடன் வீட்டுக்குள் நுழைந்தால் அந்த வீட்டில் இருப்பவர்களை அவமானப்படுத்துவதாக அர்த்தம். அவர்களுக்கு வரவேற்பும் இருக்காது.
நாம் எப்படி மற்றவர்களுக்கு பொருளை கொடுப்பதாக இருந்தால் வலது கையால் கொடுக்கிறோமோ அதேபோல் தாய்லாந்திலும் வலது கை சென்டிமென்ட் உண்டு. அங்கே வலது உள்ளங்கையில் பொருளை வைத்து நீட்ட வேண்டும். அப்போது இடது கை, வலது கையின் மணிக்கட்டைப் பிடித்து இருக்க வேண்டும். அப்படி கொடுத்தால்தான் கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் பலன் உண்டாம்.
உள்ளங்கை அரித்தால் வருமானம் என்ற சென்டிமென்ட் வெளிநாடுகளிலும் உள்ளது. துருக்கியில் இடது உள்ளங்கை அரித்தால் பணம் வரும். வலது உள்ளங்கை அரித்தால் உள்ள பணமும் போய்விடும் என்பது நம்பிக்கை.
பூனை குறுக்கே போனால் போன காரியம் உருப்படாது என்கிற சென்டிமென்ட் அமெரிக்காவிலும் உண்டு. அதிலும் கறுப்பு பூனை என்றால் கேட்கவே வேண்டாம். உடனே வீட்டுக்குத் திரும்பிப் போய் சோபாவில் படுத்துக் கொள்வார்கள். ஏனென்றால் அங்கு கறுப்பு பூனை சாத்தானின் குறியீடு.
தரையில் படுத்திருப்பவர்களை தாண்டிப் போகக்கூடாது என்பது நமது பழக்கம். இது அமெரிக்காவிலும் கடைபிடிக்கப்படுகிறது. அதிலும் குழந்தைகள் என்றால் எக்காரணத்தைக் கொண்டும் தாண்டக்கூடாது.
நாம் இரவில் நகம் வெட்ட மாட்டோம். கொரிய நாட்டினரும் அப்படித்தான். நகம் உடலின் ஒரு பாகம், அதை இரவில் வெட்டினால் எலிகள் தின்றுவிடுமாம், அதனால் நமது ஆன்மாவின் அளவு குறைந்துவிடும் என்பது அவர்களது நம்பிக்கை.
பல்லி கத்துவது நல்லது நடக்கும் என்பதற்கான அறிகுறி என்று சொல்கிறார்கள். இந்தோனேஷியாவில் கெய்கோ என்ற சிறுபல்லி சத்தம் கேட்டால் மக்கள் சந்தோஷப்படுவர். நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை கொள்வார்கள். பிரசவ வலி ஏற்படும்போது இந்த பல்லி கத்தினால் சுகப்பிரசவமாக இருக்கும் என்பது ஐதீகம்.
இப்படி ஒவ்வொரு நாட்டிலும் நம்மைப்போல செட்டிமென்ட் உண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக