சனி, 28 ஆகஸ்ட், 2010

மச்சக்கன்னி மடோனா


உலகில் இருக்கும் மக்கள் தொகையில் கால்பங்கு மக்களை தனது இசைக்கும் கவர்ச்சிக்கும் அடிமையாக்கி வைத்திருந்தார், மடோனா.வறுமையில் வாடிய தனது பெற்றோருக்கு எட்டாவது குழந்தை இவர். கல்லூரி படிப்பு வரை அரசின் உதவித் தொகையோடு படிக்க வேண்டிய நிலை. வசதியில்லாத குடும்பத்தில் பிறந்தாலும் எப்படியாவது உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற வெறி மடோனாவுக்கு சின்ன வயதில் இருந்தே தீவிரமாக இருந்தது. அதனால் கல்லூரி நாட்களிலேயே அவர் நடனமாடினார்.படிப்பை முடித்த கையோடு நியூயார்க்குக்கு ரெயிலேறினார். வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற வேகம் இருந்ததே தவிர அதை எப்படி அடைவது என்ற வழி அவருக்குத் தெரியவில்லை. அதனால் ஓட்டல்களில் நடக்கும் இரவு இசைக் கச்சேரிகளில் குரூப் டான்சராக ஆடினார். டான்ஸ் மூலம் வரும் வருமானம் வயிற்றுக்கு மட்டும் போதுமானதாக இருந்தது. அதை வைத்து பெரிய ஆளாக மாறமுடியாது என்பதை தாமதமாக உணர்ந்தார். அதனால் பாடகியாக வேண்டும் என்று நினைத்தார். குரூப் டான்சராக இருந்த மடோனா கோரஸ் பாடகியாக மாறினார். கூட்டத்தோடு கூட்டமாக ஒரு ஓரத்தில் நின்று ‘ஹம்மிங்‘ பாடினார். ஆனால் இந்தக் குரல் எப்படியோ வார்னர் பிரதர்ஸ் நிர்வாகிகள் காதில் விழுந்தது. அவ்வளவுதான் அவருக்கு அதிர்ஷ்ட மழை கொட்டத் தொடங்கியது.1981&ல் ‘லைக் எ வர்ஜின்‘ என்ற முதல் கேசட் வெளிவந்தது. அதே காலக்கட்டத்தில் தான் இசைக்கென்றே எம்.டி.வி. என்ற தனிச்சேனல் தொடங்கப்பட்டது. இந்தச் சேனல் திரும்பத் திரும்ப மடோனா பாடல்களை வீடியோ காட்சிகளாக ஒளிபரப்பிக் கொண்டே இருந்தது. மடோனாவின் குரல் இளைஞர்களின் மனதுக்குள் ஊடுருவியது. அதே சமயத்தில் அவரது மூக்குக்கு கீழே இருந்த அழகிய மச்சம் எக்கச்சக்கமானவர்களை சுண்டி இழுத்தது. மச்சக்கன்னி என்று பெயர் வந்தது. தனது குரலைப்போலவே தனது உடலையும் ரசிகர்கள் மிகவும் ரசிக்கிறார்கள் என்பதை உணர்ந்த மடோனா முதன்முதலாக தொப்புளில் வளையம் மாட்டி, உடலை காட்டிப்பாட ரசிகர்களின் எண்ணிக்கை விறுவிறு என்று கூடியது. மூக்குக்குக்கீழ் இருக்கும் மச்சம் போலவே தொப்புளில் இருக்கும் வளையமும் மடோனாவின் டிரேடு மார்க் ஆனது.பற்றி எரியும் சிலுவைக்கு முன் இவர் பாதிரியாரோடு ஆடிய ‘லைக் எ பிரேயர்‘ என்ற பாடல் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. நிறைய கண்டனக் குரல்கள் எழுந்தன. அதுவரை ஓரளவுக்கு தெரிந்த மடோனாவின் பெயரும் பாடலும் மூலை முடுக்குகள் எல்லாம் பரவின.அட சர்ச்சையில் இப்படியெல்லாம் நன்மை இருக்கிறதா என்று நினைத்த மடோனா சர்ச்சை கிளப்பும் விஷயங்களையே தேடிக் கண்டுபிடித்து பல ஆல்பங்களை கொண்டு வந்தார். ‘எரோடிகா‘ என்ற ஆல்பம்தான் இதன் உச்சக்கட்டம். மடோனா தற்போது 40களின் இறுதியில் இருக்கிறார். சீன்பென் என்ற நடிகரை திருமணம் செய்தார். குழந்தை பெற்றார். பின்னர் விவாகரத்தும் செய்தார். என்னதான் செய்தாலும் சரி இன்னமும் இளைஞர்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு குறையவே இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக