
வாழ்க்கையில் 2 வருடம் பள்ளிக்கு சென்றதோடு சரி. அதன்பின் மழைக்காகக் கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவர் பெஞ்சமின் பிராங்க்ளின். ஆனால் இவர் கணக்கு, இலக்கணம் கற்று ஒரு சிறந்த அரசியல்வாதியாக, பொதுநல ஊழியராக, விஞ்ஞானியாக, வியாபாரியாக இருந்து சாதனை படைத்தவர். அமெரிக்காவில் டாஸ்ட்டன் நகரில் ஒரு மெழுகுதிரி தொழிற்சாலை நடத்தி வந்தவருக்கு 17 குழந்தைகள் இருந்தன. அதில் 15-வது குழந்தையாக பிறந்தவர் தான் பிராங்க்ளின். இவர் 1706-ம் ஆண்டு ஜனவரி 17-ந்தேதி பிறந்தார். வறுமையின் காரணமாக பள்ளிக்கு செல்லாவிட்டாலும் நிறைய புத்தகங்களை படித்தார். சில நேரங்களில் சாப்பாட்டுக்காக வைத்திருந்த பணத்தில் கூட புத்தகங்களை வாங்கிப் படித்தார். படிப்பறிவோடு எழுதும் ஆற்றலும் பிராங்க்ளினுக்கு உண்டானது. பிராங்க்ளின் 1753-ம் ஆண்டு அமெரிக்க காலனிகளின் போஸ்ட் மாஸ்டர் ஜெனரலாகவும் வேலை பார்த்திருக்கிறார். தபால் இலாகாவில் சீர்திருத்தங்கள் செய்து, வருமானம் தரக்கூடிய இலாகாவாக மாற்றியமைத்தார். 1847-ல் அமெரிக்கா முதன் முதலாக ஸ்டாம்புகள் வெளியிட்ட போது பிராங்க்ளின் உருவம் பொறித்த ஸ்டாம்புகளை வெளியிட்டு கவுரவப்படுத்தியது.பிராங்க்ளின் தான் நூலகம் என்ற ஒன்றை முதன் முதலாக உருவாக்கினார். அரிய நூல்களை பலரும் படிக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார். தீவிபத்தினால் ஏற்படும் நஷ்டங்களை ஈடுகட்ட இன்சூரன்ஸ் கம்பெனி ஒன்றையும் ஆரம்பித்தார். இவர் தோற்றுவித்த பென்சில்வேனியா கல்லூரியானது, பிற்காலத்தில் பல்கலைக்கழகமாக வளர்ச்சி அடைந்தது. விஞ்ஞான ஆராய்ச்சியிலும் பிராங்க்ளின் கவனம் செலுத்தினார். தனது 42-வது வயதில் நல்ல பொருளாதார நிலையை அடைந்ததும் வியாபாரத்தில் இருந்து விலகி, பொதுநல சேவைக்காக தன் வாழ்நாட்களை செலவிட நினைத்தார்.மின்னலில் மின்சாரம் உள்ளது என்பதை உலகிற்கு நிரூபித்துக் காட்டினார். இடிதாங்கியை கண்டுபிடித்தார். மின்சாரத்தை கம்பி மூலம் வேறு இடத்துக்கு அனுப்ப முடியும் என்ற உண்மையை உலகத்திற்குச் சொன்னவர், இவர் தான். பசியின் கொடுமையை அறிந்தவன், உணர்ந்தவன் தான் அறிவாளியாக முடியும் என்று சொன்னவர், பிராங்க்ளின். அவர் சொன்னது போலவே வறுமையான குடும்பத்தில் பிறந்த அவர் தனது அயராத உழைப்பால் உலகம் போற்றும் மேதையானார். மனிதனாக பிறந்தவன் சிந்திக்க வேண்டும். சிந்திப்பவன் தான் மனிதன் என்ற கொள்கை உடையவராக விளங்கினார், பிராங்க்ளின். 1790 ஏப்ரல் 17-ந்தேதி அவர் மண்ணுலகை நீத்தார். போர் என்பது அமைதியான வாழ்வை சீர்குலைத்து அழிவினை தேடித்தருகிறது. எனவே சமுதாயம் அமைதியாக வாழ சமாதானமே சிறந்த வழி என்ற உண்மையை உலகநாடுகளுக்கு உணர்த்திய பிராங்க்ளினின் பெயர் சரித்திரத்தில் என்றென்றும் அழியாப்புகழுடன் விளங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக