திங்கள், 23 மே, 2011

நிஜமான ஸ்பைடர்மேன்

ஸ்பைடர்மேன் படங்களில் உயரமான கட்டிடங்களை அனாயசமாக தாண்டும் ஹீரோவை பார்த்து மலைத்துப்போன குழந்தைகளுக்கு, உண்மையில் ஒருவர் உயரமான கட்டிடங்களில் வெறும் கையால் பிடித்து ஏறுகிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கும்.
அந்த ஆச்சரியமான மனிதரின் பெயர் அலெய்ன் ராபர்ட்.


இவரது சராசரி வாழ்க்கையே சாகசங்கள் செய்வதுதான். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இவருக்கு பிரெஞ்ச் ஸ்பைடர்மேன், மனிதச்சிலந்தி என்ற ஏராளமான பட்டப்பெயர்கள், செல்லப்பெயர்கள் உள்ளன. எவ்வளவு உயரமான கட்டிடமாக இருந்தாலும் கருவியோ, பாதுகாப்பு உபகரணங்களோ இல்லாமல் கைகளை வைத்தே அதன் மீது ஏறி விடுவார்.


சின்னவயதில் இருந்தே இந்த பழக்கம் இவருக்கு ஆரம்பித்து விட்டது. இவருக்கு 12 வயது இருக்கும்போது வீட்டுச்சாவியை மறந்து வைத்து விட்டு வந்து விட்டார். ஆனால் அலெய்ன் பெற்றோரிடம் மற்றொரு சாவி இருக்கிறது. எனினும் அவர்கள் வரும்வரை காத்திருக்க இவரால் முடியவில்லை. எனவே தன் வீடு இருக்கும் 8&வது மாடியில் உள்ள பால்கனிக்கு சுவரை பிடித்தே ஏறி விட்டார். இதுதான் சாகசப்பயணத்தின் ஆரம்பம்.


அன்று முதல் எந்த கட்டிடமாக இருந்தாலும் அலெய்னுக்கு லிப்டோ, படிக்கட்டில் ஏறுவதோ பிடிக்காமல் போனது. ஜன்னல் கம்பி, ஸ்லாப் என எல்லாவற்றையும் தனது உபகரணமாக்கி ஏற ஆரம்பித்தார். கையில் வியர்த்தால், பையில் இருக்கும் சாக்பீஸ் பவுடரை தடவிக்கொண்டு, மீண்டும் ஏற ஆரம்பித்து விடுவார்.


ஈபிள் கோபுரம், பெட்ரோனஸ் கோபுரங்கள், உலகின் உயரமான தாய்பெய் கோபுரம் என பல இடங்களில் பிடி பிசகாமல் ஏறி சாதனை படைத்திருக்கிறார் அலெய்ன்.
கட்டிடங்களில் ஏறும்வரை ஆச்சரியத்தோடு வாய் பிளந்து நிற்கும் போலீஸ்காரர்கள், ஏறி முடிந்ததும் தற்கொலை முயற்சி என கைது செய்து விடுவார்கள். ஆனால் இரண்டே நாட்களில் வெளியே வந்து விடுவார் அலெய்ன். உள்ளே போகும்போது விலங்கிட்ட அதே போலீஸ்காரர்கள் வெளியே வரும்போது ஆட்டோகிராப் வாங்குவார்கள்.

1999- ல் சிகாகோவில் உள்ள வில்லிஸ் கோபுரத்தில் ஏறியதுதான் மிக மோசமான பயணம் என்கிறார் அலெய்ன். இந்த 110 மாடிக்கட்டிடத்தில் ஏறிக்கொண்டு இருக்கும்போதே பனி பெய்ய தொடங்கிவிட்டது.

கடைசி 20 மாடியின் ஜன்னல்கள் ஈரப்பதம் ஆகிவிட்டன. மிகவும் திணறிய அலெய்ன், கொஞ்சம் ஓய்வெடுத்து ஏறி முடித்திருக்கிறார்.

இதுவரை 7 முறை கீழே விழுந்திருக்கிறார் அலெய்ன். ஒவ்வொரு முறையும் பலத்த அடி. ஒரு முறை விழுந்ததில் அலெய்னின் 60 சதவீத உடல் பாகங்கள் ஊனமாகிவிட்டன.

இனி உங்களால் கட்டிடங்களில் ஏற முடியாது. முயற்சி செய்யாதீர்கள் என எச்சரித்தார்கள், டாக்டர்கள். ஆறே மாதங்கள்தான் ஓய்வு. உற்சாகமாக கைகளை தட்டியபடி ஏற தொடங்கிவிட்டார் அலெய்ன்.

அவரின் சிகரம் தொடும் சாதனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

ஏலம் எடுத்து கின்னஸ் சாதனை

கின்னஸ் சாதனை புரிவதற்காக பலரும் பலவிதங்களாக முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் எந் முயற்சியும் செய்யாமல் சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியாமல் கின்னஸில் இடம்பெறும் நிகழ்ச்சிகளும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

டைட்டானிக் கப்பல் விபத்து பற்றி நமக்கெல்லாம் தெரியும். ஆனால் டைட்டானிக் சம்பந்தப்பட்ட ஒன்று கின்னஸில் இடம் பெற்றது யாருக்கும் தெரியாது.

அமெரிக்காவின் லிலியன் அஸ்பிளன்ட் என்பவருக்கு ஐந்து வயது இருக்கும்போது அவரது தந்தை டைட்டானிக் கப்பலில் குடும்பத்தோடு பயணம் செய்ய டிக்கெட் வாங்கினார். நடுக்கடலில் கப்பல் மூழ்கியபோது லிலியன், அவருடைய அம்மா மற்றும் அவரது சகோதரர் மூவரும் தப்பினர்.

அந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 95 ஆண்டுகள் கழித்து லிலியன் அஸ்பிளண்ட் இறந்துபோக, அவர் பத்திரப்படுத்தி வைத்திருந்த டிக்கெட்டை உறவுக் காரர்கள் தேடி எடுத்து ஏலம் விட்டிருக்கிறார்கள். டைட்டானிக் கப்பலின் டிக்கெட் ஒன்று 33 ஆயிரம் பவுண்டுக்கு ஏலம்போனது.

பேன்சி நம்பர்களை ஏலம் எடுக்கும் முறை வெளிநாடுகளில் இருக்கிறது. கத்தார் நாட்டில் உள்ள கியூடெல் என்ற தொலைதொடர்பு நிறுவனம் பேன்சி நம்பர்களை ஏலம் விட்டது. அப்போது 6666 666 என்ற எண் கொண்ட செல்போன் எண்ணை 11 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறார் ஒருவர்.

உலகிலேயே அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட மொபைல்போன் எண் இதுதான். இதற்கு முன் இரண்டு கோடி ரூபாயக்கு ஒரு எண் விற்கப்பட்டதே உலக சாதனையாக இருந்தது.

அபூர்வமான ஒரு வைர ஏலம் கின்னஸில் இடம் பிடித்தது. ஜெனிவாவில் கடந்த ஆண்டு அபூர்வமான வைரமோதிரம் ஒன்று ஏலம் விடப்பட்டது. 24.78 காரட் மதிப்புள்ள இந்த வைரமோதிரம், இந்திய மதிப்பில் 170 கோடி ரூபாயாகும். இதற்கு முன்னர் 2008&ல் 35.56 கேரட் கொண்ட நீலவைரக்கல் 110 கோடிக்கு விற்பனையானது.

இந்த இரண்டு விலையும் கின்னஸ் சாதனையாக இருக்கிறது.
கால்பந்து ஒன்று கின்னஸில் வந்த சாதனையும் இருக்கிறது. 2010 -ல் கால்பந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டி நெதர்லாந்துக்கும், ஸ்பெயினுக்கும் இடையே நடந்தபோது பயன்படுத்தப்பட்ட கால்பந்து 74 ஆயிரம் டாலருக்கு விலைபோனது.

அடிடாஸ் நிறுவனம் தயாரித்த அந்த பந்து ஆன்லைன் ஏலத்துக்கு வந்தபோது 133 பேர் போட்டியிட்டார்கள். ஆனால் அதிர்ஷ்டசாலி ரசிகர் ஒருவருக்கு அடித்தது யோகம்.

இந்த பணம், வறுமையில் வாடும் குழந்தைகளுக்கும், எய்ட்ஸ் நோய் பாதித்தவர்களுக்கும் செலவிடப்படும் என உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நடத்திய தென்னாப்பிரிக்கா சொல்லி இருக்கிறது.

நீந்த தெரியாத நீர்யானை

திமிங்கலம், யானை, காண்டாமிருகம் போன்ற மிருகங்களுக்கு அடுத்தபடியாக பூமியில் வாழும் நான்காவது மிகப் பெரிய மிருகம் நீர்யானை. ஆறு, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளில்தான் இவை வாழும். இவற்றின் உடலில் இருந்து சிவப்பு நிற திரவம் ஒன்று வெளியேறிக்கொண்டே இருக்கும். பகல் நேரத்தில் நீருக்குள் இருக்கும் இந்த நீர் யானைகள் இரவானதும் நிலப்பரப்புக்கு வந்து மேயத்தொடங்கி விடும். தண்ணீரில் கூட்டமாக வாழ்ந்தாலும் மேய்ச்சலுக்கு போகும்போது தனித்தனியாகத்தான் போகும்.
நீர் யானைகள் பார்ப்பதற்கு பெரிதாக தெரிந்தாலும் அதன் கால்கள் மிகவும் குட்டையானவை. இதன் எடை 1,500 முதல் 3,000 கிலோ வரை இருக்கும். மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும். நீண்டதூரம் இதனால் ஓட முடியாது.
ஆப்பிரிக்க காடுகளில் இந்த இனம் உள்ளது. தற்போது ஒரு லட்சத்து 50 ஆயிரம் நீர் யானைகள் இருப்பதாக கணக்கெடுத்துள்ளார்கள். நீர் யானைகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று சாதாரண நீர்யானை. மற்றொன்று நைல் நீர் யானை. இது சுமார் 540 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த ஒரு மிருகம். இதன் மூதாதையர்களிடம் இருந்து இரண்டு மரபணுக்கள் உருவாகி ஒன்று திமிங்கலமாகவும், மற்றொன்று நீர் யானையாகவும் மாறின.
நீரில் வாழும் நீர் யானைகளுக்கு நீந்த தெரியாது என்பது ஆச்சரியமான ஒன்று. ஆனால் இவற்றுக்கு தனியான ஒரு வித ஈர்ப்பு விசை இருக்கிறது. அதன் துணைகொண்டு நீரின் அடியில் கூட நடக்கவும் ஓடவும் முடிகிறது. தங்களின் சிறப்பு ஈர்ப்பு விசையை பயன்படுத்தி நீருக்கு அடியில் செல்லும், மீண்டும் மேலே வரும். நீர்யானைகள் எப்போதும் நீருக்கு மேலேயே மிதந்து கொண்டு இருக்கும்.
சில நேரம் தங்கள் கால்களை உந்தி நீருக்கடியில் செல்லும். அல்லது 3 அல்லது 5 நிமிடம் வரை உள்ளேயே இருக்கும். பின் மேலே வந்து ஒருமுறை சுவாசித்து விட்டு மீண்டும் நீருக்கடியில் சென்று விடும். தண்ணீருக்கடியில் தூங்கும்போது கூட 5 நிமிடங்களுக்கு ஒருமுறை கண்ணை திறக்காமலேயே நீரின் மேல் பகுதிக்கு வந்து மூச்சுக்காற்றை வாங்கி மீண்டும் நீருக்கடியில் சென்று விடும். நீருக்கு மேலே வரும்போதுதான் இதன் மூக்கு துவாரம் திறக்கும். நீருக்குள் மூழ்கும்போது மூடிக்கொள்ளும். இவையெல்லாமே தானியங்கிபோல் கச்சிதமாக நடக்கின்றன.

உலகின் முதல் எஸ்.எம்.எஸ்.


எப்போதும் எதிலும் முன்னிலையில் இருக்க வேண்டும் என்பதுதான் அமெரிக்கர்களின் எண்ணம். அதை பல துறைகளிலும் நிரூபித்து உள்ளனர். அப்படி இருக்கும் போது செல்போனை மட்டும் விட்டு வைப்பார்களா? உலக அளவில் செல்போனை அதிகம் பயன்படுத்துபவர்கள் என்ற பெருமை இப்போது அமெரிக்கர்கள் வசம்தான் இருக்கிறது.
சராசரியான ஒரு அமெரிக்கர் மூன்றுக்கும் மேற்பட்ட செல்போன்களை பயன்படுத்துகிறார்கள். பரம ஏழையாக இருந்தாலும் அதிகபட்சமாக 18 மாதங்கள்தான் ஒரு செல்போனை உபயோகிக்கிறார்கள். அதற்கு மேல் அதை உபயோகிப்பது இல்லை. இதில் 2.3 சதவீதத்தினர் மட்டுமே தங்களது பழைய செல்போனை மறு சுழற்சி செய்கிறார்கள். மற்ற எல்லோருமே செல்போனை குப்பை தொட்டியில் வீசி எறிகிறார்கள் என்று அமெரிக்க சர்வே ஒன்று சொல்கிறது.
ஒரு வருடத்திற்கும் மேலாக செல்போனை உபயோகிக்கும்போது அந்த செல்போனில் உள்ள கேட்மியம், லெட், பெரிலியம் போன்ற தனிமங்களால் நோய் எதிர்ப்பு சக்தி, நரம்பு மண்டலம், மூளை, ஈரல், நுரையீரல் போன்றவை எளிதாக பாதிக்கப்படும். இதனால் அமெரிக்காவில் அடிக்கடி செல்போனை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.
தற்போதைய நிலவரப்படி 250 ஆயிரம் டன் எடை கொண்ட 55 கோடி செல்போன்கள் குப்பைத் தொட்டிக்கு வர காத்திருக்கின்றன. இந்த வருடம் மட்டும் 55 லட்சம் செல்போன்கள் புதிதாக பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றன. இவை கிட்டத்தட்ட 75 சதவீத உலக மக்கள் தொகைக்கு சமம் என்று சர்வதேச தகவல் தொடர்பு சம்மேளனம் தெரிவிக்கிறது.
1973ல் முதன்முறையாக செல்போனை உபயோகப்படுத்தியவர் டாக்டர் மார்ட்டின் கூப்பர். 1992 முதல் எஸ்.எம்.எஸ். என்ற குறுஞ் செய்தி அனுப்பும் வசதி செல்போனில் அறிமுகப்படுத்தப்பட்டது. நீல்டேப்வொர்த் என்பவர் தனது நண்பனுக்கு அனுப்பிய “மேரி கிறிஸ்துமஸ்“ என்பதுதான் உலகின் முதல் எஸ்.எம்.எஸ். ஆகும். இது 1992&ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24&ந் தேதி அனுப்பப்பட்டது.
இன்று அமெரிக்காவில் நாளொன்றுக்கு 5 லட்சம் எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இது மக்கள் தொகையில் முன்னணியில் இருக்கும் சீனா, இந்தியா போன்ற நாட்டு மக்கள் பயன்படுத்துவதை விட அதிகம்.

ஹார்ட்அட்டாக்கை தெரிவிக்கும் செல்போன்

உலக மக்கள் தொகையில் 30 சதவீத மரணங்களுக்கு ஹார்ட்அட்டாக் தான் காரணம் என்கிறது ஒரு புள்ளிவிவரம். ஒருவருக்கு ஹார்ட்அட்டாக் ஏற்பட்டவுடன், பதற்றத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திக்கி திண்டாடும் அந்த நிமிடங்கள்தான் தங்கத்தருணம். அந்த சமயம் உடனடியாக முதலுதவி அளிக்கப்படுபவர்கள் பிழைத்துக்கொள்கிறார்கள்.
ஆனால் எப்போது, யாருக்கு ஹார்ட்அட்டாக் வரும் என்று எப்படி கணிப்பது? அதற்கு கைகொடுக்க இருக்கிறது மினியேச்சர் ஈ.சி.ஜி.மிஷின் பொருத்தப்பட்ட செல்போன். உங்கள் சட்டைப்பாக்கெட்டில் இருக்கும் இந்த மொபைல், உங்களின் இதய துடிப்புகளை சென்சார் செய்தபடியே இருக்கும். ஹார்ட் அட்டாக் சமயம் அலர்ட் ஆகி தானாகவே மொபைலில் பதிவு செய்யப்பட்டு இருக்கும் தகவலை டாக்டருக்கு இந்த மொபைல் அனுப்பிவிடும்.
உடனே நோயாளியையோ உறவினரையோ டாக்டர்கள் தொடர்பு கொண்டு உடனடி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து விடலாம். அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் அட்வான்ஸ் கம்ப்யூட்டிங் டெக்னாலஜி டைரக்டர் ஆலன்சிசெஞ்ச், உண்மையில் அவ்வளவு பெரிய ஈ.சி.ஜி.இயந்திரத்தை கையடக்கத்தில் கொண்டு வந்ததுதான் பெரியசாதனை என்கிறார்.
ஆராய்ச்சி அளவில் இருக்கும் இந்த திட்டம் வெற்றி அடைந்தால் இந்த தொழில் நுட்பத்தையும் சாப்ட்வேரையும் இலவசமாக அளிக்கப்போவதாக இந்த திட்டத்துக்கு நிதி உதவி அளித்து வரும் மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது வந்து விட்டால் நோயாளிகள் பற்றிய தகவல் சரியான நேரத்தில் டாக்டருக்கு போய்விடும். இதன் மூலம் அந்த ஆபத்தான தருணத்தில் இருந்து நோயாளிகள் காப்பாற்றப்படுவார்கள். இதனால் ஹார்ட்அட்டாக் மூலம் இறப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் வாய்ப்புள்ளது.

ராணுவ கார்ட்டூன்

குழந்தைகளுக்கான கார்ட்டூன் படங்களை வரைந்து புகழ் பெற்றவர் வால்ட் டிஸ்னி. இவரை அமெரிக்க ராணுவம் கார்ட்டூன் வரைய சொல்லிக் கேட்டது. 1942-ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்தபோது அமெரிக்க கடற்படை தளபதி ஈ.எஸ்.கால்டுவெல் மஸ்கிடோ போர்ஸ் என்ற புதிய படைப்பிரிவை உருவாக்கினார். அதற்கு ஒரு சின்னம் தேவை என்று நினைத்தபோது அவரது நினைவுக்கு வந்தவர் வால்ட் டிஸ்னிதான்.
உடனே கடற்படை தளபதி டிஸ்னிக்கு ஒரு கடிதம் எழுதினார். தளபதியின் கோரிக்கையை தட்ட முடியுமா? ஒரு குண்டின் மேல் நீரை கிழித்து செல்லும் கொசு படத்தை வரைந்து அனுப்பினார். அந்த படத்தை ஒவ்வொரு படகிலும் வரைய செய்தார் கடற்படை தளபதி. படத்தை பார்த்த கடற்படை வீரர்கள் உற்சாகமாக போருக்கு கிளம்பினார்கள்.
இந்த உற்சாகம் அமெரிக்க ராணுவத்தின் ஒவ்வொரு பிரிவுக்கும் வேண்டுமென்று அந்தந்த பிரிவின் தளபதிகள் விருப்பப்பட, ஒவ்வொரு பிரிவிலும் இருந்து டிஸ்னிக்கு கடிதம் போனது. தனியொரு ஆளாக இதை எப்படி செய்வது என்று எண்ணிய டிஸ்னி ஐந்து பேரை வேலைக்கு அமர்த்தினார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்ட்டூன் சின்னங்களை வரைந்தார்.
இதற்காக டிஸ்னி ஒரு பைசா கூட சம்பளமாக வாங்கவில்லை. அமெரிக்க படைகளின் சின்னங்களை பார்த்து விட்டு அவர்களோடு சேர்ந்து போரிட்ட பிரிட்டன், போலந்து, நியூசிலாந்து நாட்டு ராணுவமும் அவர்கள் படைகளுக்கும் படம் வேண்டி டிஸ்னிக்கு கடிதம் எழுதினார்கள்.
ராணுவத்தில் சேரச்சொல்லி மக்களை அழைப்பதற்கு ஒரு படம், ராணுவத்தின் பெருமையை சொல்வதற்கு ஒரு படம், மருத்துவம் பார்க்க வரச்சொல்லி டாக்டர்களுக்கு ஒரு படம் என்று விதவிதமாக தினுசு தினுசாக வரைந்து தள்ளியது டிஸ்னி குரூப்.
இது தவிர எதிரிகளை கிண்டலடித்து நிறைய கார்ட்டூன்களை போர்க்கருவிகளில் வரைந்து அனுப்பினார்கள். ஒரு கார்ட்டூனில் சாத்தானுக்கு அருகே 1, 2, 3 என்ற எண்களின் கீழ் ஹிட்லர், டோஜோ, இல் டியூஸ் ஆகிய மூவரின் பெயரும் இருக்கும். அவர்களை எண்ணை சட்டியில் போடவா, உயிரோடு வேகவைக்கவா? என்று சாத்தான் கேள்வி கேட்பதை போன்று இருக்கும் படத்தை பார்த்து குஷியான அமெரிக்க வீரர்கள், ஜெர்மனி மீது படம் வரைந்த குண்டுகளையே போட்டார்கள்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த ஹிட்லரின் நாஜிப்படையை சேர்ந்த ஒருவர் ஜெர்மனி விமானத்தில் அமெரிக்கா போல விமானத்தின் மீது மிக்கி மவுஸ் கார்ட்டூனை வரைந்து அமெரிக்க விமானம் போல மாற்றினார். தங்களது விமானம்தான் வருகிறது என்று கார்ட்டூனை பார்த்து அசால்டாக இருந்த அமெரிக்க படைகளின் மீது கொத்துக்கொத்தாக குண்டுகளை போட்டனர். பெருத்த சேதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட டிஸ்னி முதன்முறையாக ராணுவத்துக்காக கார்ட்டூன் வரைந்ததற்கு வருத்தப்பட்டார். அதன்பின் ராணுவத்துக்காக கார்ட்டூன் வரைவதில்லை என்ற முடிவை எடுத்தார்.