
அந்த ஆச்சரியமான மனிதரின் பெயர் அலெய்ன் ராபர்ட்.
இவரது சராசரி வாழ்க்கையே சாகசங்கள் செய்வதுதான். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இவருக்கு பிரெஞ்ச் ஸ்பைடர்மேன், மனிதச்சிலந்தி என்ற ஏராளமான பட்டப்பெயர்கள், செல்லப்பெயர்கள் உள்ளன. எவ்வளவு உயரமான கட்டிடமாக இருந்தாலும் கருவியோ, பாதுகாப்பு உபகரணங்களோ இல்லாமல் கைகளை வைத்தே அதன் மீது ஏறி விடுவார்.
சின்னவயதில் இருந்தே இந்த பழக்கம் இவருக்கு ஆரம்பித்து விட்டது. இவருக்கு 12 வயது இருக்கும்போது வீட்டுச்சாவியை மறந்து வைத்து விட்டு வந்து விட்டார். ஆனால் அலெய்ன் பெற்றோரிடம் மற்றொரு சாவி இருக்கிறது. எனினும் அவர்கள் வரும்வரை காத்திருக்க இவரால் முடியவில்லை. எனவே தன் வீடு இருக்கும் 8&வது மாடியில் உள்ள பால்கனிக்கு சுவரை பிடித்தே ஏறி விட்டார். இதுதான் சாகசப்பயணத்தின் ஆரம்பம்.
அன்று முதல் எந்த கட்டிடமாக இருந்தாலும் அலெய்னுக்கு லிப்டோ, படிக்கட்டில் ஏறுவதோ பிடிக்காமல் போனது. ஜன்னல் கம்பி, ஸ்லாப் என எல்லாவற்றையும் தனது உபகரணமாக்கி ஏற ஆரம்பித்தார். கையில் வியர்த்தால், பையில் இருக்கும் சாக்பீஸ் பவுடரை தடவிக்கொண்டு, மீண்டும் ஏற ஆரம்பித்து விடுவார்.
ஈபிள் கோபுரம், பெட்ரோனஸ் கோபுரங்கள், உலகின் உயரமான தாய்பெய் கோபுரம் என பல இடங்களில் பிடி பிசகாமல் ஏறி சாதனை படைத்திருக்கிறார் அலெய்ன்.
கட்டிடங்களில் ஏறும்வரை ஆச்சரியத்தோடு வாய் பிளந்து நிற்கும் போலீஸ்காரர்கள், ஏறி முடிந்ததும் தற்கொலை முயற்சி என கைது செய்து விடுவார்கள். ஆனால் இரண்டே நாட்களில் வெளியே வந்து விடுவார் அலெய்ன். உள்ளே போகும்போது விலங்கிட்ட அதே போலீஸ்காரர்கள் வெளியே வரும்போது ஆட்டோகிராப் வாங்குவார்கள்.
1999- ல் சிகாகோவில் உள்ள வில்லிஸ் கோபுரத்தில் ஏறியதுதான் மிக மோசமான பயணம் என்கிறார் அலெய்ன். இந்த 110 மாடிக்கட்டிடத்தில் ஏறிக்கொண்டு இருக்கும்போதே பனி பெய்ய தொடங்கிவிட்டது.
கடை

இதுவரை 7 முறை கீழே விழுந்திருக்கிறார் அலெய்ன். ஒவ்வொரு முறையும் பலத்த அடி. ஒரு முறை விழுந்ததில் அலெய்னின் 60 சதவீத உடல் பாகங்கள் ஊனமாகிவிட்டன.
இனி உங்களால் கட்டிடங்களில் ஏற முடியாது. முயற்சி செய்யாதீர்கள் என எச்சரித்தார்கள், டாக்டர்கள். ஆறே மாதங்கள்தான் ஓய்வு. உற்சாகமாக கைகளை தட்டியபடி ஏற தொடங்கிவிட்டார் அலெய்ன்.
அவரின் சிகரம் தொடும் சாதனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.