திங்கள், 3 ஆகஸ்ட், 2020

குழந்தை செல்வம் அருளும் ஸ்ரீவைர முனீஸ்வரர்


-சசிரேகா தங்கத்துரை, சேலம்
சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் திசவிளக்கு கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள கொல்லங்கரடு மலையில் ஸ்ரீவைர முனீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு சாதி, மத, இன வேறுபாடின்றி அனைத்து தரப்பினரும் சென்று வழிபட்டு வருகிறார்கள்.

குழந்தை வடிவில் காட்சி...

இயற்கை எழில் சூழ்ந்த கொல்லங்கரடு மலையில் கிழக்கு நோக்கி சமயபுரத்தம்மன், ஸ்ரீவைர முனீஸ்வரர், விநாயகர், முருகர் ஆகிய தெய்வங்களும், மேற்கில் அசுரரும், வடக்கில் காமதேனு, வைர குருமணி உள்ளிட்ட தெய்வங்களும் அமைந்துள்ளனர். இதில் வைர குருமணி தனது வலது காலை தலையின் மேல் வைத்து யோக நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
மற்ற கோவில்களில் முனியப்பன் பல்வேறு ஆயுதங்களுடன் கம்பீரமாக காட்சி தருவார். ஆனால் இந்த கோவிலில் மட்டும் குழந்தை வடிவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் ஸ்ரீவைர முனீஸ்வரர்.
வாரந்தோறும் திங்கள், வெள்ளி மற்றும் பவுர்ணமி, அம்மாவாசை நாட்களில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெறும். இந்த பூஜையில் சேலம் மட்டுமல்லாமல், திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் திரளாக கலந்து கொள்வார்கள். பிற்பகல் 1 மணியளவில் பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் ஆப்பிள், திராட்சை, வாழைப்பழம், மாதுளை உள்ளிட்ட பழங்களால் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறும். அதன்பிறகு சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்படும். இதனைதொடர்ந்து மாலை 6 மணியளவில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பால் மற்றும் பழங்கள் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படும்.

குழந்தைப்பேறு

தீராத நோயால் அவதிப்படும் பக்தர்கள் சுவாமியின் எலுமிச்சை, திருநீறு ஆகியவற்றை பய பக்தியுடன் பெற்றுச்செல்கிறார்கள். வீட்டிற்கு சென்றவுடன் அவற்றை பால் அல்லது தண்ணீரில் கலந்து குடித்தால் அந்த நோய் குணமாகும் என்பது பக்தர்களின் அதீத நம்பிக்கையாகும். 
குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் 5 பவுர்ணமிக்கு கோவிலுக்கு வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பாலை வாங்கி குடிக்கிறார்கள். மேலும் எலுமிச்சை மற்றும் சந்தனத்தை பிரசாதமாக வாங்கிச்செல்கிறார்கள். இதனை 3 முறை தொடர்ந்து குடித்து வந்தால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

ஆடிப்பெருக்கு

இந்த கோவிலின் ஆண்டு விழா வைகாசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. மேலும் ஆடிப்பெருக்கு அன்று சுவாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறும். குறிப்பாக அன்று அதிகாலை 5 மணியளவில் பக்தர்கள் சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சித்தர் கோவிலுக்கு நடந்து செல்வார்கள். பின்னர் அதிகாலை 5 மணியளவில் பக்தர்கள் அருவி மற்றும் கிணறுகளில் குளித்துவிட்டு பால்குடம், தீர்த்தக்குடம், அக்னிசட்டி மற்றும் அலகு குத்தி மேளதாளம் முழங்க ஊர்வலமாக ஸ்ரீவைர முனீஸ்வரர் கோவிலுக்கு செல்வார்கள்.

அன்னதானம்

பாத யாத்திரை செல்லும் பக்தர்களின் வசதிக்காக வியாபாரிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் அன்னதானம், குளிர்பானம் மற்றும் மோர் ஆகியவை வழங்குவார்கள். மேலும் கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம் ஆகியவை நடைபெறும். ஊர்வலத்தில் வாணவேடிக்கை நடைபெறும். இது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு செல்லும் பால் மற்றும் தீர்த்தக்குடத்தில் உள்ள புனித நீரில் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறும். இதனை தொடர்ந்து அசுரர் தெய்வத்திற்கு ஆடு, கோழி ஆகியவை பலியிடப்படும். மற்ற தெய்வங்களுக்கு பொங்கல் படைக்கப்படும். ஸ்ரீவைர முனீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்தத்தை பக்தர்கள் தங்கள் வீடுகளுக்கு எடுத்து சென்று தெளிப்பார்கள். இதன் மூலம் ஐஸ்வர்யம் கிடைப்பதாக பக்தர்களால் இன்றளவும் நம்பப்படுகிறது. 

கும்பாபிஷேகம்

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவைர முனீஸ்வரருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் ஆண்டு விழா நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

அசுரரை வணங்கினால் வாழ்வில் வசந்தம்....


ஸ்ரீவைர முனீஸ்வரருக்கு எதிரே அமர்ந்த கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் அசுரர். இங்கு வருபவர்கள் முதலில் அசுரரை வணங்கி விட்டு அதன் பிறகு ஸ்ரீவைர முனீஸ்வரரை வணங்கி செல்கிறார்கள். அசுரருக்கு ஆடு, கோழி ஆகியவை பலியிடப்படும். மற்ற தெய்வங்களுக்கு சைவமே பிரதானமாகும். 
பேய், பிசாசு தொல்லையால் அவதிப்படுபவர்கள் மற்றும் பில்லி சூனியத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு அசுரர் முன்பு வைத்திருக்கும் சாட்டையால் பாடம் போடப்படும். உடல்நலக்கோளாறால் அவதிப்படுபவர்களுக்கு 5 பாடமும், மற்றவர்களுக்கு ஒரு படமும் போடப்படும். அசுரரை வணங்கி எலுமிச்சை பழத்தால் விளக்கேற்றி வழிபாடு செய்து வந்தால் அவர்களது வாழ்வில் வசந்தம் ஏற்படும்.

கிரிவலம் செல்லும் பக்தர்கள்

கலியுக தெய்வம், அவதார புருஷர் என்று பக்தர்களால் போற்றப்படும் ஸ்ரீவைர முனீஸ்வரர் அன்பின் வடிவமாக திகழ்கிறார். இந்த கோவிலின் முக்கிய நேர்த்திக்கடனாக மரமனை உள்ளது. தீராத நோயால் அவதிப்பட்டவர்கள் மற்றும் குழந்தைப்பேறு பெற்ற தம்பதிகள் இந்த வேண்டுதலை கட்டாயம் நிறைவேற்றுகிறார்கள்.
மரமனை என்பது சாமிக்கு சீர் செய்வதாகும். வாழைப்பழம், தேங்காய், எலுமிச்சை, பாக்கு, வெற்றிலை, பூ ஆகியவற்றை பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு செல்வார்கள். முன்னதாக அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீவைர முனீஸ்வரர் கொல்லங்கரடு மலையில் கிரிவலம் செல்வார். அவருக்கு முன்பாக பக்தர்கள் சீர் வரிசைகளை சுமந்துகொண்டு சுமார் 1Ñ கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்வார்கள். அப்போது நடைபெறும் வாணவேடிக்கை கண்கொள்ளா காட்சியாக இருக்கும். மரமனை செய்யும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பொங்கல் பிரசாதமாக வழங்கப்படும்.

நேர்த்திக்கடன்








மூலவரான ஸ்ரீவைர முனீஸ்வரர் தீராத நோய்களை தீர்க்கும் வைத்தீஸ்வரனாகவும், குழந்தை செல்வத்தை அருளும் வேந்தனாகவும் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக திருநீறு மற்றும் எலுமிச்சை மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் குழந்தைப்பேறு வேண்டி கோவிலுக்கு வரும் தம்பதியினருக்கு ஸ்ரீவைர முனீஸ்வரருக்கு அலங்காரம் செய்யப்பட்ட சந்தனம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த பிரசாதத்தை பால் அல்லது தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் அந்த தம்பதியினருக்கு கட்டாயம் குழந்தைப்பேறு கிடைக்கும். இதேபோல் கால் வலி மற்றும் உடல் வலியால் அவதிப்படும் பக்தர்கள் சுவாமிக்கு அபிஷேகத்திற்கு பயன்படுத்திய எண்ணெயை வாங்கிச்செல்கிறார்கள். இந்த எண்ணெயை தங்களது உடலில் தேய்த்துக்கொண்டால் அந்த வலி காணாமல் போய்விடுகிறது என்பது இங்கு வந்து செல்லும் பக்தர்களின் அனுபவப்பூர்வமான உண்மையாகும்.
சுவாமியின் அருளால் குழந்தை பெற்றவர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தும் விதமாக தங்களுடைய குழந்தைகளுக்கு வைரமணி, வைரம், பட்டு வைரமணி, அஜய் வைரமணி ஆகிய பெயர்களை சூட்டி மகிழ்கிறார்கள். சரிவர பேசமுடியாத குழந்தைகள் மற்றும் படிப்பில் போதிய கவனம் செலுத்தாத குழந்தைகளுக்கு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட தேன் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதனை குடிக்கும் குழந்தைகள் கல்வி அறிவு மற்றும் பேச்சில் சிறந்து விளங்குகிறார்கள்.
இதேபோல் குழந்தைகளின் எடைக்கு எடை காசு போடுவார்கள். அதன் பிறகு பக்தர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக மரமனை செய்து ஸ்ரீவைர முனீஸ்வரர் அருளை பெற்று செல்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக