வியாழன், 21 அக்டோபர், 2010

புற்றுநோயை வென்றவர்



‘உங்களுக்கு புற்றுநோய் பிழைக்க வாய்ப்பே இல்லை‘, என்று டாக்டர்கள் ஒரு 25 வயது வாலிபனிடம் சொன்னால் எப்படிப்பட்ட மனிதனும் நொறுங்கி போவான். ஆனால் லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங் அப்படி நொறுங்க வில்லை.
வேகமாக சைக்கிள் ஓட்டும் தன் திறமையையும், இளமையையும் ஒரு வியாதிக்கு பலி கொடுப்பதா? என்று நினைத்த லான்ஸ் நம்பிக்கையோடு சிகிச்சைகளை எதிர்கொண்டு முழுமையாக குணமடைந்தார். அப்பாடா ஒரு வழியாக பிழைத்து விட்டோம், இனி நிம்மதியாக ஓய்வெடுக்கலாம் என்று அவர் ஒதுங்கி விட வில்லை. பழையபடி மீண்டும் சைக்கிளை ஓட்ட தொடங்கினார். படிப்படியாக வெற்றிகளை குவித்தார்.
புற்றுநோயை வென்றவர் என்ற ஒரு பெருமையோடு தன் வாழ்நாள் முடிந்து விடகூடாது என்று நினைத்தார். அந்த பெருமையை ஒரு ஓரமாக தூக்கி வைத்தார். உலகின் நம்பர் ஒன் சைக்கிளிங் சாம்பியன் என்ற பட்டத்தை பெறுவதற்காக உழைத்தார். வெற்றியும் அடைந்தார்.
தன்னம்பிக்கையின் மொத்த உருவமாக அமெரிக்கர்கள் இவரை பார்க்கிறார்கள். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் பிறந்த லான்சை வளர்த்தது அவருடைய அம்மா லிண்டா. 7 வயதில் சைக்கிள் ஓட்ட தொடங்கிய லான்ஸ், அடுத்த சில ஆண்டுகளிலேயே ‘ட்ரையத்லான்‘ போட்டிகளில் கலந்து கொண்டார்.
‘ட்ரையத்லான்‘ என்பது மூன்று விதமான போட்டிகளின் கலவை. ஒரு கிலோ மீட்டர் நீச்சலடிக்க வேண்டும். 15 மைல் தூரம் சைக்கிள் ஓட்ட வேண்டும். மூன்று மைல் ஓட வேண்டும். இதில் பல கோப்பைகளை சின்ன வயதிலேயே பெற்றிருக்கிறார் லான்ஸ். வெற்றிகளை தொடர்ந்து குவித்து கொண்டே இருந்த லான்ஸ்க்கு 1996&ல் தாங்க முடியாத தலைவலி, ரத்த வாந்தி. அதில் மிகவும் தளர்ந்து போனார். டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்ததில் தான் புற்று நோய் தெரியவந்தது. தனக்கென தனித்தன்மை வாய்ந்த எதிர்காலத்தை தேடி கொண்டு இருக்கும் ஒரு இளைஞனுக்கு இதை விட அதிர்ச்சியளிக்கும் செய்தி வேறு எதுவும் இருக்க முடியாது. பிழைக்க மாட்டீர்கள் என்று சொன்ன டாக்டர்களுக்கு லான்ஸ் உறுதியாக கூறிய பதில் இது தான்.
இந்த அல்ப கேன்சருக்காக நான் என் லட்சியத்தை மாற்றி கொள்ள முடியாது. அதிலிருந்து குணமடைந்து பின் மீண்டும் சைக்கிள் ஓட்டி நான் உலகின் நம்பர் ஒன் வீரனாக வரவேண்டும். அதற்கான வாய்ப்புகள் பாதிக்காதபடி எனக்கு சிகிச்சை கொடுங்கள் என்றார்.
சில மாதங்களில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. உடல் அளவில் மிகவும் தளர்ந்து போயிருந்த போதும் நம்பிக்கை இழக்காமல் எல்லாவற்றையும் பொறுமையாக தாங்கி கொண்டு காத்திருந்தார். 1997-ல் கேன்சரில் இருந்து பூரணமாக குணம் அடைந்ததாக டாக்டர்கள் அறிவித்தனர். லான்ஸ் மீண்டும் தன் சைக்கிளை எடுத்தார். தினமும் பயிற்சி செய்தார். போட்டிகளில் கலந்து கொண்டார். ஆனால் வெற்றி பெற
முடியவில்லை. ஆனாலும் உலகம் அவரை வெற்றியாளராகவே பார்த்தது.
கடுமையான புற்றுநோய் பாதிக்கப்பட்ட ஒருவர் இந்தளவுக்கு விளையாடுவதே மிக பெரிய விஷயம் என்று பெருமையான செய்திகள் வெளிவந்தன. லான்ஸ் இது போன்ற பெருமைகளை வெறுத்தார். தன்னை பார்த்து யாரும் உச்சுக்கொட்ட வேண்டியதில்லை. கைதட்ட வேண்டும் என்று விரும்பினார். அதற்காக இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்தார்.

உழைப்பு வீண் போகவில்லை. 1999-ல் சைக்கிளிங்கில் உலக கோப்பையாக கருதப்படும் ‘டூர் டி பிரான்ஸ்‘ என்ற போட்டியில் லான்ஸ் முதலிடத்தை பிடித்தார். வெற்றி என்றால் சாதாரண வெற்றியல்ல. புற்றுநோய் வந்தவர்களுக்கு அடுத்து வாழ்க்கையில் எதுவுமே கிடையாது என்ற பழைய பஞ்சாகத்தின் மீது விழுந்த சம்மட்டி அடி.
புற்றுநோய் வருவதற்கு முன்பு லான்ஸ் இந்த போட்டியில் வெற்றி பெற்றது கிடையாது. ஆனால் அதிலிருந்து குணமான பிறகு சவாலான இந்த பந்தயத்தில் ஒரு முறையல்ல, தொடர்ந்து ஏழு முறை வென்று 1999ல் இருந்து 2005 வரையிலான எல்லா கோப்பைகளையும் ஒட்டுமொத்தமாக வீட்டுக்கு அள்ளி சென்றார். ஏழாவது முறை ‘டூர் டி பிரான்ஸ்‘ கோப்பையை பெற்று சரித்தரம் படைத்த லான்ஸ் தான் ஓய்வு பெற போவதாக அறிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக