ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2024

கருணை மிகுந்த காவல் தெய்வம் சுடலைமாடன்

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்களம் சூளைவாய்க்கால் கிராமத்தில் அருள்பாலித்து வரும் வேம்படி சுடலை மாடன் கோவை மாவட்டம் சரவணம்பட்டி ஜனதா நகரில் சுயம்புவாக உருவாகி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு சிவனணைந்த பெருமாள், பிரம்மசக்தி, பலவேசக்காரன், கருப்பசாமி, சத்திராதி முண்டன், பேச்சியம்மன் உள்ளிட்ட தெய்வங்கள் உள்ளன.

ந்த கோவிலில் செவ்வாய்க்கிழமை மதியம் 3 மணி மற்றும் இரவு 12 மணியளவில் சிறப்பு பூஜை நடைபெறும். இந்த பூஜையில் கோவை மாவட்டம் மட்டுமின்றி நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், திருச்சி மற்றும் கேரளாவை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்து செல்கிறார்கள். இதேபோல் வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெறும்.


ஐகோர்ட்டு மகாராஜாவான சுடலைமாடன் 3 தலைமுறைக்கு முன்பே இங்கு வீற்றிருந்தாலும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு தான் ஊர் மக்களால் கோவில் கட்டி திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. பொதுவாக சுடலைமாடன் கோவில்கள் குடியிருப்பு பகுதியில் இல்லாமல் தனித்து அமைந்து இருக்கும். மேலும் சுவாமி ஆக்ரோஷம் மிகுந்தவராக இருப்பார். ஆனால் கோவை வேம்படி சுடலைமாட சுவாமி குடியிருப்புகள் வருவதற்கு முன்பே அமர்ந்து இருந்தாலும் மக்களுக்கு காவல் தெய்வமாகவும், சாந்த சொரூபமாகவும் கருணை மிகுந்தவராகவும் திகழ்கிறார்.

அசைவ பிரியரான சுடலைமாடனுக்கு இரவு பூஜையின்போது ஆடு, கோழி, பன்றி இறைச்சிகள் சமைக்கப்பட்டும், அவித்த முட்டைகள், மது வகைகள், சுருட்டு உள்ளிட்டவை படையலிடப்படும்.

51 பந்தி தெய்வங்களின் முதன்மையாக கருதப்படும் சுடலை மாடனை மனமுருகி வழிபட்டால் தீராத நோய்கள் மற்றும் கோர்ட்டு வழக்குகள் தீருவதுடன், திருமணம், குழந்தை பேறு கிட்டும் என்பது பக்தர்களின் அதீத நம்பிக்கையாக உள்ளது. 
சிவன்-பார்வதி மைந்தனான சுடலைமாடன் கிழக்கில் மாப்பிள்ளை அலங்காரத்திலும், பேச்சி அம்மனின் அரவணைப்பில் மேற்கில் முண்டனாகவும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இதில் மாப்பிள்ளை அலங்காரத்தில் கைலாயத்தில் இருப்பதால் சுடலைமாடனுக்கு பொங்கல் மட்டுமே நிவைத்தியம் செய்யப்படுகிறது‌. ஆண்டிற்கு 2 நாட்கள்  மட்டுமே (ஆடி, தை மாத கொடை விழா) அசைவம் படைக்கப்படுகிறது.

சுடலை மாட சுவாமி செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வேட்டைக்கு செல்வார் என்றும் அப்போது ராஜா காலத்தில் பயன்பாட்டில் இருந்த பூட்ஸ் (காலணி) அணிந்து செல்வார் என்றும் புராணங்களில் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 22-ந்தேதி கோவை வேம்படி சுடலைமாடன் சுவாமி பீடத்தின் அருகே சுவாமியின் கால் பாதம் (பூட்ஸ்)பதிந்துள்ளது. இதனை அப்பகுதி மக்கள் பக்தி பரவசத்துடன் கண்டு வணங்கி வருகிறார்கள்.
சுடலை மாடன் சுவாமி காவல் தெய்வமாக இருந்தாலும் அவர் மீது நம்பிக்கை வைக்கும் பக்தர்களுக்கு என்றும் அவர் துணையாக இருப்பார் என்பதையே காட்டுகிறது.

விரதம் இருக்கும் பைரவர்

சுடலை மாடசுவாமி கோவிலில் கோப்பை ரகத்தை சேர்ந்த நாய் ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது. 5 வயதான இந்த நாய் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் புதன்கிழமை அதிகாலை 3 மணி வரை மனிதர்களைப் போன்று உணவு உண்ணாமல் விரதம் மேற்கொள்கிறது. குறிப்பாக செவ்வாய்க்கிழமை பால், தண்ணீர் கூட குடிக்காமல் விரதம் மேற்கொள்கிறது. மேலும் நள்ளிரவில் நடைபெறும் சாம பூஜையில்  சுடலை மாடனுக்கு காவலாக மயானத்திற்கு சென்று விட்டு அதன் பின்னர் மீண்டும் கோவிலுக்கு வருகிறது. இதனால் இந்த நாயை பைரவர் என்றே அப்பகுதி மக்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

சாம்பல் ஒன்றே போதும்...

கோவை வேம்படி சுடலை மாடனுக்கு ஆடி, தை மாதங்களில் 3-வது செவ்வாய்க்கிழமை கொடை விழா நடைபெறும்.  அப்போது திரளான பக்தர்கள் சுவாமிக்கு ஆடு, கோழிகளை பலியிட்டு பூஜை செய்வார்கள்.  பொதுவாக எல்லா கோவில்களிலும் ஆடு, கோழிகளை பலியிடுவதற்கு முன்பு அவற்றுக்கு தீர்த்தம் தெளிப்பார்கள். அதன் பின்னர் ஆடு, கோழிகள் துளுர்த்ததும் அதனை பலியிடுவார்கள்.
கோவை வேம்படி சுடலைமாடன் கோவில் திருவிழாவில் ஆடு, கோழிகளுக்கு தீர்த்தம் போடுவதற்கு பதில் சுடலைமாடனின்
 சாம்பல் (திருநீறு) போடப்படும். இதில் அனைத்து ஆடு, கோழிகளும் சுவாமி அருளால் துளுர்க்கும். இது போன்ற அதிசயம் இங்கு மட்டுமே நடைபெறுவதாக கோவை பக்தர்கள் தெரிவித்தனர்.