சனி, 27 ஆகஸ்ட், 2011

மூளையின் உணவு


உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் உணவு தேவைப்படுகிறது. அதேபோல்தான் மூளைக்கும் உணவு தேவை.


மூளை எப்போதும் ஏகப்பட்ட பசியோடு இருக்கும். பசி என்றால் ஏதோ சாம்பார் சாதம், பிரியாணி கேட்டு பசிப்பதல்ல. அது ஆக்சிஜன் பசி.
மூளையை பாதுகாக்க ஐந்து போர்வைகள், இரண்டு திரவங்கள் உண்டு. மண்டை தோலில் இருந்து தொடங்கி, பின் மண்டை ஓடு, கபால எலும்பு, அதன்கீழ் மெயின்ஜிஸ் என்ற பகுதி வரை இது செல்கிறது.
உடலிலே கெட்டியான சருமம் தலையில்தான் இருக்கிறது. அதற்கு மேல் தலைமுடி வேறு இருக்கிறது. ஒட்டப்பட்ட வலுவான தேங்காய் போல இருக்கிறது. அதற்குள் மூளை மிகவும் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கிறது. மண்டையில் விழும் சகல விதமான அடிகளையும் இது தாங்கிக் கொண்டு மூளையை காப்பாற்றுகிறது.


மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு 800 மில்லி ரத்தம் தேவைப் படுகிறது. உடலின் மொத்த எடையில் 50ல் ஒரு பங்கே அளவு கொண்ட மூளை, ரத்தம், ஆக்சிஜன் ஆகியவற்றின் மொத்த தேவையில் ஐந்தில் ஒரு பாகத்தை அபகரித்துக் கொள்கிறது. மூளை தூங்கினாலும், விழித்திருந்தாலும் பசி.. பசி... என்று அலறும் ராட்சத குழந்தை.


மூளைக்கு அவ்வளவு சக்திதேவை. தனக்கான சக்தியை சேமித்து வைத்து கொள்வதற்கு இடமில்லை. எனவே அதற்கு எப்போதும் ரத்தம் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கும். வெறும் 10 விநாடி ரத்த வரவு இல்லாமல் நின்று போனால்கூட மூளையால் தாங்கமுடியாது. உடனே மயக்கம் போட்டு விடும். திடீரென்று மனிதர்கள் மயங்கி விழுவது இப்படி ரத்தம் மூளைக்கு செல்வது தடைபடுவதால்தான். சில நிமிடம் ஆக்சிஜன் இல்லை என்றாலும் அவ்வளவுதான், அவர் மரணம் அடையும் நிலைக்கு சென்றுவிடுவார். அதாவது கோமா நிலைக்கு போய்விடுவார்.


இப்படி மூளை ராட்சத உணவு உண்டாலும் அதன் உணவுத் தேவை சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும். “எனக்கான உணவை(ஆக்சிஜனை) எப்போதும் குறைக்காதே, நான் அதை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்வேன்“ என்று இதயத்துக்கு கட்டளையிடும் மூளை, அதை செலவிடுவது குறைவு. உதாரணமாக மூன்று மணி நேரம் மூளையை கசக்கிப் பிழிந்து ஒரு கவிதை எழுதினால் அதற்கு மூளை எவ்வளவு சக்தி செலவழித்திருக்கும் தெரியுமா? ஒரு பட்டாணி அளவுதான் செலவு செய்திருக்கும். மூளை அப்படியொரு சுகவாசி.


எப்போதும் அது ஒரு சக்கரவர்த்தி போல் தண்ணீர் படுக்கையில் உல்லாசமாக மிதந்து கொண்டிருக்கிறது. இந்த மிதவையே, அதன் எடையை இருபது மடங்கு குறைத்துவிடுகிறது. இந்த திரவம்தான் நாம் எப்படி குதித்தாலும் மூளைக்கு ஒரு சின்ன அதிர்வுகூட ஏற்படாமல் பாதுகாக்கிறது. இந்த திரவம் இல்லையென்றால் தலையை திருப்பினாலோ, தலையை ஆட்டினாலோ வலி உயிர்போகும். உடலின் நிலைக்கு ஏற்ப இந்த திரவத்தின் அழுத்தம் மாறுபடும். மூளை அதிகமாக சாப்பிட்டாலும் உடலுக்கு மிக முக்கியமான உறுப்பு அதுதான்.