வெள்ளி, 17 டிசம்பர், 2010

செல்போன் பற்றிய தகவல்கள் சரியா? தவறா?


செல்போனை பற்றியும் அதன் கதிரியக்கங்களை பற்றியும் ஏகப்பட்ட தகவல்கள் இருக்கின்றன. அவற்றில் அறிவியல்பூர்வமான உண்மை எந்த அளவிற்கு இருக்கிறது என்று பார்க்கலாம்.
*விமான பயணத்தின் போது செல்போனை பயன்படுத்தினால் அதன் சிக்னல்கள் விமானத்தின் மின்னணு கருவிகள் செயல் பாட்டில் குளறுபடியை ஏற்படுத்திவிடும். இது விமானத்தையே செயலிழக்க வைத்துவிடும். இது சரிதான் என்று இதுவரை எந்த ஆராய்ச்சி முடிவுகளும் சொல்லவில்லை. இருந்தாலும் ஒரு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக செல்போனில் தொடர்பு கொள்வதற்கு தடை செய்யப்பட்டு உள்ளது.
*பெட்ரோல் பங்குகளில் செல்போனை பயன்படுத்தினால் தீப்பற்றிக்கொள்ளும் என்ற எண்ணம் உள்ளது. இது உண்மை இல்லை என்பது பலரது கருத்து. செல்போன்களில் இருந்து உருவாகும் ஸ்டாடிக் எலக்ட்ரிக் சார்ஜ் எனப்படும் மின்சக்தியின் அளவானது, தீப்பொறியை உண்டாக்கும் அளவிற்கு இருக்காது என்று நிச்சயமாக சொல்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் எண்ணெய் நிறுவனமான ஷெல் இது குறித்து எச்சரிக்கை விடுத்திருப்பதாக மேற்கோள் காட்டப்பட்டு உலகமெங்கும் இ&மெயில்கள் பறந்தன. இப்போது ஷெல் நிறுவனமும் இதை மறுத்துள்ளது.
*செல்போனை தொடர்ந்து உபயோகித்தால் அதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு மூளையில் கட்டிகளையும் மூளை கேன்சரையும் உருவாக்கும் என்பது மற்றொரு கருத்து. ஆனால் இதுகுறித்தும் உறுதியான ஆராய்ச்சி முடிவுகள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்வது நலம் என்பது ஆய்வின் கருத்து.
*செல்போனில் பேட்டரி சார்ஜ் குறைந்தால், ஒரு குறிப்பிட்ட எண்ணை அழுத்தினால் சார்ஜ் ஏறும், அதை வைத்து அவசர அழைப்பனை பேசிவிடலாம் என்பது மற்றொரு கருத்து. ஆனால் இது உண்மை கிடையாது. பேட்டரி சார்ஜ் குறைந்தால் மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டுமே தவிர வேறு குறுக்கு வழிகள் எதுவும் கிடையாது.
*மருத்துவ மனைகளில் பயன்படுத்துவதால், மருத்துவக் கருவிகள் பாதிக்கப்படும், கதிர்வீச்சு நோயாளிகளின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் என்பது மற்றொரு கருத்து. இதிலும் உண்மை இல்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும் நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு மருத்துவமனைகளில் செல்போன்களை சைலண்ட் மோடில் வைப்பது நல்லது.
*செல்போனை பேண்ட் பாக்கெட்டில் வைத்தால், ஆண்மைக்குறைவு ஏற்படும், உயிரணுக்கள் பாதிக்கப்படும், ஆண்களை மலடாக்கும் என்று நிறைய செய்திகள் வருகின்றன. இதில் ஓரளவு உண்மை உள்ளது. பொதுவாக உடல் வெப்பநிலையை காட்டிலும் குறைவான வெப்பநிலையில் தான் உயிரணுக்கள் உற்பத்தியாகும். ஆன் செய்த செல்போன்கள் தொடர்ந்து கதிர்வீச்சை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கும். அந்த நிலையில் பேண்ட் பாக்கெட்டில் செல்போனை அதிக நேரம் வைத்திருந்தால், உயிரணுக்கள் குறைந்து ஆண்மை பாதிக்கப்படலாம் என்கின்றனர், விஞ்ஞானிகள்.
எனவே ஆண்கள் செல்போனை பேண்ட் பாக்கெட்டில் வைப்பதை தவிர்ப்பது, அவர்களுக்கும் நல்லது, வாரிசு உருவாவதற்கும் நல்லது.